search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St. Saleh Mata"

    • கொடைக்கானலில் புனித சலேத் மாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது
    • கொட்டும் மழையில் கொடியேற்றத்தில் குடை பிடித்தபடி ஏராளமான பக்தர்கள்.கலந்து கொண்டனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற புனித சலேத் அன்னை ஆலய 156-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரான்ஸ் நாட்டில் லா சலேத் என்னும் சிற்றூரில் இறை செய்தி வழங்கியதாக போற்றப்பட்டு ஆங்கிலேயர் ஒருவரின் முயற்சியில் முதன்முதலாக 1886-ஆம் ஆண்டு இந்தியாவில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டது புனித சலேத் ஆலயம். பிரான்ஸ் நாட்டில் உள்ளது போல் அதே சொரூபம் கொண்ட சிலை கொடைக்கானலில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இங்கு பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இந்த ஆலயத்தில் வந்து தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை பூர்த்தி செய்து கொள்கின்றனர். சாதி மத பேதமின்றி ஒவ்வொரு ஆகஸ்ட் மாதங்களிலும் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் வருகிற 14-ந் தேதி வரை நடைபெறும்.ஒவ்வொரு நாளும் நடைபெறும் திருப்பலிகளில் மறை மாவட்ட பேராயர்கள், வட்டார அதிபர் மற்றும் பங்குத்தந்தைகள் உபவாசம் செய்வார்கள்.

    கொடியேற்றத்திற்கு முன் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கனமழை கொட்டியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டிய கனமழையின்போது பக்தர்கள் அனைவரும் குடையை பிடித்துக் கொண்டு திருப்பலியில் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்து கொடியேற்றும் நிகழ்வுக்கு பங்குத் தந்தைகள் சென்றபோது திடீரென கனமழை சாரல் மழையாக மாறியது.

    இது அனைத்து பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. மிக கனமழை பெய்த போது கூட குடையைப் பிடித்துக் கொண்டு ஒருவர் கூட கலைந்து செல்லாமல் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நகர் மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர் மன்றத்தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராஹிம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×