என் மலர்
நீங்கள் தேடியது "சுரேகா யாதவ்"
- சுரேகா இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண் ரெயில் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றார்.
- கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்தவர் சுரேகா யாதவ். விவசாய குடும்பத்தில் பிறந்த சுரேகா யாதவ் 1989-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன்மூலம் இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து, 1996-ம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநராக சுரேகா பணியாற்றினார். அதன்பின், 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில் ஓட்டுநராக அவர் பணியாற்றி வந்தார்.

கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். பணியின் இறுதியாக மகாராஷ்டிராவின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார். அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்தபின் ரெயில்வேயில் 2,000-க்கும் அதிகமான பெண் ரெயில் ஓட்டுநர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுரேகாவின் பணி பிற பெண்களும் ரெயில்வேயில் ஓட்டுநராக சேர உந்து சக்தியாக திகழ்ந்தது.

இவரது பணிகளில் சில மைல் கற்கள்:
இந்திய ரெயில்வேயில் முதல் பெண் என்ஜின் டிரைவர்.
1989-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவராக பணி.
ஆசிய அளவிலும் முதல் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமை.
1996-ல் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக பதவி உயர்வு
அதன்பின், மலைப்பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதில் கைதேர்ந்தார்.
2000-ல் ரெயில்வே மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மகளிர் சிறப்பு மின்சார ரெயிலை அறிமுகப்படுத்தினார். அந்த ரெயிலை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.
2023, மார்ச் 13-ல் சோலாப்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. இடையிலான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களில் சுரேகா யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயந்திரங்கள் உங்கள் பாலினங்களைப் பார்ப்பதில்லை, பலத்தை மட்டுமே பார்க்கிறது என கூறும் சுரேகா யாதவ்,
என்னால் முடியும் என்பதால், எல்லா பெண்களாலும் முடியும் என அனைத்துப் பெண்களுக்கும் தன்னம்பிக்கையாகத் திகழ்கிறார்.






