என் மலர்
நீங்கள் தேடியது "லக்னோ விபத்து"
- லக்னோ கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் குடோனாக பயன்பட்டு வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று நேற்று [சனிக்கிழமை] மாலை 5 மணியளவில் இடிந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியும் நொறுங்கியது.
இந்த விபத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், லக்னோ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், நிவாரணமும் அறிவித்துள்ளார்.
அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.






