என் மலர்
நீங்கள் தேடியது "ராமநாத சாமி கோவில்"
- அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது.
ராமேசுவரம்:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார். அங்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து திருப்புல்லாணியில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ராமாயண காவியத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆதிஜெகநாத பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
அங்கு அனைத்து பிரகாரங்களையும் சுற்றி வந்த கவர்னர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உற்சவரை தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சென்றார். அங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு தரப்பட்டது. கோவில் மூலவரை தரிசனம் செய்த கவர்னருக்கு பட்டர்கள் பிரசாதம் வழங்கினர்.
பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த கவர்னர் ராமநாத சாமி கோவில் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்த தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியில் கலந்துகொண்டார். மேலும் அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மீண்டும் ராமேசுவரத்தில் இருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். முன்னதாக திருப்புல்லாணி, ராமேசுவரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






