என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு அகற்ற"

    • போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை
    • மாநகராட்சி வாகனத்திற்கு கொண்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூரில் பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக மண்டி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்டி வீதி உள்ளது. இந்த வீதியின் இருபுறங்களில் அரிசி மண்டி, மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளது.

    சாதாரண நாட்களில் காலை முதலே போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கும். பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நான்குபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்க வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் களைக்கட்ட தொடங்கி உள்ளது. கடைகளுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டி யே இருப்பு வைத்து கொள்ள வாகனங்களில் சரக்கு வரத்து அதிகரித்து ள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில் மண்டி வீதி நுழைவு பகுதியில் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் வைத்து வியா பாரம் செய்யப்படுகிறது. இதனால் வாகனங்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் பெரும் சிரமமத்திற்கு ஆளாகினர்.

    இது குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. புகாரின் பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மண்டி வீதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த தள்ளுவண்டிகளை அகற்றினர்.

    தொடர்ந்து 5 தள்ளுவண்டிகளை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் கொண்டு சென்றனர்.

    இருப்பினும் மண்டி வீதி, லாங்கு பஜார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளது. இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×