என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி நஷ்டம்"
- கருப்பு கவுனி நெல்லை வேளாண் அலுவலகத்தில் 3 கிலோ வாங்கி நடவு செய்தேன்.
- 8 மாதங்கள் முடிந்தும் நெல் முளைக்காமல் வெறுமன பயிர்கள் மட்டும் மூங்கில் வளர்வது போல் வளர்ந்து வருகிறது.
தருமபுரி,
உணவுப் பாதுகாப்பு, கிராமப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் விவசாயம் முக்கிய அங்கமாக உள்ளது.விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளும் கிராமப்புறங்களில் முக்கிய வாழ்வாதாரத்தை வழங்குகின்றன. தமிழகத்தில் வேளாண்துறை விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், தற்போதைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான பயிர் வகைகளை உருவாக்கவும், வணிகமயமாக்கல் மற்றும் விவசாய முறைகளை மாற்றுவதற்கான வலுவான உள்கட்டமைப்புகளை வடிவமைத்து வருகிறது.
இதனால் விவசாயிகளுக்கு நேரத்தையும், செலவையும் குறைத்து நன்கு கட்டமைக்கப்பட்ட விற்பனை முறையை நிறுவுதல் மற்றும் விவசாயப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வேளாண் துறை செய்து வருகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் துறையின் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறாக உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் விவசாயத்தில் சிறந்து விளங்கி வருகிறது. மாவட்டத்தில் நெல், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள், காய்கறி வகைகள், பூ வகைகள் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மண்ணின் தரத்திற்கு ஏற்ப உள்ள பயிர்களை விவசாயிகள் சொந்த முயற்சியில் சாகுபடி செய்து நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகளின் பங்கு சொற்ப அளவிற்கே உள்ளதாகவும், அதுவும் விவசாயிகளை நஷ்டத்தை அடைய செய்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற விவசாயி கூறும் போது:-
எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இதில் கரும்பு, வாழை, சோளம், மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர் வகைகளை தோட்டக்கலையில் இருந்து வாங்கி வந்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். வேளாண் துறையின் அறிவுறுத்தலின்படி கருப்பு கவுனி நெல்லை மொரப்பூர் வேளாண் அலுவலகத்தில் கிலோ ரூ.100 என 3 கிலோ வாங்கி ஜனவரி மாதத்தில் நாற்று விட்டு, பிப்ரவரி மாதத்தில் நடவு செய்தேன். இதுவரை 8 மாதங்கள் முடிந்தும் நெல் முளைக்காமல் வெறுமன பயிர்கள் மட்டும் மூங்கில் வளர்வது போல் வளர்ந்து வருகிறது. இதனை மொரப்பூர் வேளாண்துறை அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் தெரிவித்தேன். மேலும், இந்த பயிரை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றேன்.
அதற்கு அதிகாரிகள், வேளாண் இணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி மொரப்பூர் பகுதி விவசாயிகளுக்கு 20 நபர்களுக்கு வழங்கி உள்ளோம். இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. நீங்கள் மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளிர்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். இவ்வாறு அவர் கூறினார். நெல் முளைக்காத பயிருக்கு பதிலாக மாற்றுபயிராக தக்காளி நடவு செய்து இருந்தால் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்கும். கரும்பு நடவு செய்திருந்தால் 32 டன் விளைச்சல் கிடைத்திருக்கும். ஆனால் வேளாண் துறை அதிகாரிகளின் தவறுதலான வழிமுறையால் கால விரயம் மற்றும் ரூ.60 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இழப்பினை வேளாண் இணை இயக்குனர் வழங்க வேண்டும். மேலும், மொரப்பூர் வேளாண் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாயி அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.






