என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதேவம் கருப்பண்ணசாமி கோவில்"

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் காலை முதல் மாலை வரை அசைவ விருந்து வழங்கப்பட்டது.
    • அசைவ விருந்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, வாழையடி முத்துசாமி, பெரியசாமி, சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் 25-ந் தேதி நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 47 நாட்களாக தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. நேற்று 48-வது நாள் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு, சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர்களை போட்டு வைத்தனர்.

    பின்னர் காளியம்மன், கருப்பண்ணசாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று குடிப்பாட்டு மக்கள் சார்பில் தலைக்கட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

    இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிப்பாட்டு மக்கள் தங்கள் நேர்த்திக்கடனாக கருப்பண்ணசாமிக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 2,500-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை பலியிட்டனர். பின்னர் பிரமாண்டமான சமையல் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு ஆடு, கோழிகளின் கறியை சமைத்து கருப்பண்ணசாமிக்கு படையல் போட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் காலை முதல் மாலை வரை அசைவ விருந்து வழங்கப்பட்டது. இந்த அசைவ விருந்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர். கோவில் வளாகமே விழாக்கோலம் பூண்டது. வேலகவுண்டன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×