என் மலர்
நீங்கள் தேடியது "சாலை மறியல்-தர்ணா"
- ஒரு மாதத்திற்கு மேலாகியும் கால்வாய் அமைக்கும் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டது
- காட்பாடி- சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது
வேலூர்:
காட்பாடியில் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கால்வாய் பணி காட்பாடி அடுத்த கல்புதூர்-வண்றந்தாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக கால்வாய் தடுப்பு கட்ட, கம்பி கட்டும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் கால்வாய் அமைக்கும் பணி தொடராமல், கிடப்பில் போடப்பட்டது.
கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தால் தெருவின் அகலம் சுருங்கிபோனது. இதனால் வண்றந்தாங்கல் கிராமத்திற்கு அந்த வழியாக சென்றுவந்த அரசு பஸ் போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதோடு, வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.
வண்றந்தாங்கல், குளக்கரை தெரு, பஜனை கோவில் தெரு, திருவேங்கிட முதலியார் தெரு மற்றம் திருவேங்கிடம் முதலியார் சந்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், நீண்ட தொலைவு சுற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் நீடித்து வருகிறது. சாலை மறியல்
கால்வாய் கட்டப்படும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தை தாண்டி வீட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்க நிற்க வைக்கப்பட்டுள்ள கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காட்பாடி-சித்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.
மேலும் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காட்பாடி-சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது.






