என் மலர்
நீங்கள் தேடியது "அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை"
- நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- வாக்குவாதத்தால் பரபரப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில், சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
குடிநீர் வினியோகம் சரிவர நடைபெறுவதில்லை, மின்விளக்குகளும் பராமரிக்கப்படுவதில்லை என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறி அந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் புறக்கணிக்க படுவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முற்றுகையிட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தாங்கள் நகரமன்ற தலைவரை சந்தித்து முறையிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர மன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன் மற்றும் பொதுமக்களில் சிலர் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத்தை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் செய்து தராததை கூறி முறையிட்டனர்.
அப்போது இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் நகரமன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 26-வது வார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தில் நகர அ.தி.மு.க.செயலாளர் கே.பி.சந்தோஷம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






