என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயிலில் சோதனை"
- 2 மணி நேரம் நடந்தது
- தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை
வேலூர்:
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
எனினும் கைதிகள் ரகசியமாக அவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கைதிகள் அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில், 3 இன்ஸ்பெக்டர் உள்பட 50 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலுக்கு வந்தனர்.
அவர்கள் சிறைத்துறை காவலர்கள் 65 பேர் என 115 பேர் ஜெயில் வளாகத்தில் அணிவகுத்து நின்றனர். அப்போது அவர்களுக்கு எவ்வாறு சோதனை நடத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு குழுக்களாக கைதிகளின் அறைகளுக்கு சென்றனர். அங்கு கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பி விட்டு, அவர்களின் அறைகள் மற்றும் கழிவறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறை உள்ளிட்ட ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது.
அதேபோல் பெண்கள் ஜெயிலிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.






