என் மலர்
நீங்கள் தேடியது "உற்பத்தித் துறையில் வளர்ச்சி"
- கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
- பார்வையாளர்களை கவருவதற்கு, சமையல் போட்டிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 'பி.என்.ஐ. வளம் 2023' என்ற தொழில் கண்காட்சி வருகிற 26-ந்தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பான, நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, அதியமான் கல்விக்குழும தலைவரும், ராஜ்யசபை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பிதுரை கலந்துகொண்டு பேசியதாவது:-
"இந்தியா வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் காண வேண்டும். தென்னிந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் என அதிகளவில் உருவாகின்றனர். மேலும் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர்.
வட மாநிலங்களில் தொழில் முனைவோர், வர்த்தகத் துறையினர் அதிக அளவில் உருவாகின்றனர். முன்னாள் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ஒசூரில் தொழிற்சாலைகள் வருவதற்கு வித்திட்டார். இங்கு அசோக் லேலண்ட், டி.விஎஸ், டைட்டான் போன்ற தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தார். அவரால் ஒசூரில் தொழில் வளர்ச்சி பெற்றது. உலக அளவில் தொழில் புரட்சியில், சீனா மிரள வைக்கும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
எனவே மேக் இந்தியா திட்டத்தில், உற்பத்தித் துறையில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைய வேண்டும். தரமான, உற்பத்தி சார்ந்த பெரிய மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வர வேண்டும்" .இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பி.என்.ஐ. செயல் இயக்குநர் பத்மநாபன், வருகிற மே 26 முதல் 28-ந் தேதி வரை ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் பி.என்.ஐ வளம் 2023-என்ற தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பெரிய நிறுவனங்களான அசோக் லேலண்ட், டிவிஎஸ், டைட்டான், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களும் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பார்வையாளர்களை கவருவதற்கு, சமையல் போட்டிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்". இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், பி.என்.ஐ தர்மபுரி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முனிவரி பத்மநாபன், வளம் 2023 திட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணன், பி.என்.ஐ. ஒருங்கிணைப்பாளர் லதா ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.






