என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்"

    • நகராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
    • விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து செல்லத்தக்கவாறு, உரிமம் வழங்கப்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும், நகரின் அசுர வளர்ச்சியை கொண்டும், சுகாதாரத்தை பேணும் வகையில், கசடு, கழிவு மேலாண்மையை, முறையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய ஏதுவாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ல் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன் பேரில் நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தல் செய்தல், கசடு, கழிவுகளை கழிவுநீர் வாகனம் மூலம் பாதுகாப்பாக எடுத்து சென்று, இடைப்பாடி நகராட்சி, சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றுவதற்கு வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி, தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து செல்லத்தக்கவாறு, உரிமம் வழங்கப்படும். மேற்படி கழிவுநீர் வாகனத்தை இயக்கும் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியபட்டால் எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களை அணுகுமாறும், இடைப்பாடி நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றுவதற்கு நடைக்கு, 200 ரூபாய் கட்டணமாக வீட்டின் உரிமையாளரே செலுத்த வேண்டும்,

    கழிவுநீர் எடுக்கும் போது, நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஏதேனும் பின் விளைவுகள், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பாக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×