என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் கட்ட அகழாய்வு பணி"

    • கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
    • 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பது தெரிய வந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில், இந்த கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பது தெரிய வந்தது.

    இந்த இடுகாட்டில் தலா 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை விட்டம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சேதமடைந்திருந்த கல்வட்டங்களிலிருந்து ஈமப்பேழையின் எச்சங்கள், இரும்புக் கருவிகள், கற்கருவிகள் கண்டறியப்பட்டன.

    இதையடுத்து இந்தப் பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் பண்பாட்டை உலகறிய செய்யலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது.

    இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.

    இதையொட்டி கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ், தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, ஆர்.குப்புசாமி, கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஈ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வு பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டார். இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் செப்.30-ஆம் தேதி வரை முதல் கட்ட அகழாய்வு பணிகள் செய்ய உள்ளோம். குத்துக்கல் மற்றும் மெருகூட்ட பயன்படுத்தப்பட்ட பள்ளங்களும் இங்கு காணப்படுகின்றன. இரும்பு காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள் குறியீட்டு அடையாளங்களுடன் காணப்படுகின்றன.

    புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்பு காலங்களை கண்டறிய இந்த ஆய்வு வழி வகுக்கும். மேலும் இந்த பகுதியின் பண்பாட்டு கால வரிசையை புரிந்து கொள்ள உதவும் என்றனர்.

    ×