என் மலர்
நீங்கள் தேடியது "மயில்கள் மரணம்"
- வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
- இறந்த மயில்களின் அருகில் விஷம் கலக்கப்பட்ட உணவு மற்றும் நெல்மணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரில் வயல்கள் உள்ளன. ஊர் திருவிழாவை முன்னிட்டு சில நாட்களுக்கு சேகர் சித்தானூருக்கு வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மயில்களின் அருகில் விஷம் கலக்கப்பட்ட உணவு மற்றும் நெல்மணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மயில்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேவகோட்டையில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






