என் மலர்
நீங்கள் தேடியது "கத்தியால் குத்தி கிணற்றில் வீசிய நண்பர்கள்"
- நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்தி படுகொலை செய்து கிணற்றில் வீசினர்.
- கஞ்சா பிரச்சினையில் இந்த கொலை செய்ததாக குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி. பழைய சர்ச் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கிருத்திக் செல்வா (வயது 20). தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவரது பெற்றோர்கள் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கிருத்திக் செல்வாவின் செல்போன் சிக்னல்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடைசியாக அவரது நண்பர்களிடம் பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது நெருங்கிய நண்பரான பிரின்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. கிருத்திக் செல்வா உத்தமபாளையம் சந்தோஷ் திரையரங்கம் அருகே தனது நண்பர் பிரின்சிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மற்ற நண்பர்களான கோபி, சுதர்சன், முகமது மீரான் ஆகியோரும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் கிருத்திக் செல்வா அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் சமாதானம் செய்வதற்காக முகமது மீரானின் மோட்டார் சைக்கிளில் அவரை தாமஸ் காலனி பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு 4 பேரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலில் கல்லைக் கட்டி அருகில் இருந்த தோட்டத்து கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டனர். போலீசார் விசாரணையில் மாயமான வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தெரிய வரவே இதில் தொடர்புடைய 4 பேரையும் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கிணற்றில் பிணமாக கிடந்த கிருத்திக் செல்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






