என் மலர்
நீங்கள் தேடியது "நடமாடும் தகன மேடை"
- முழுக்க முழுக்க கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும்.
- வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டுமே நிறுத்தி எரியூட்டப்படும்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் ஈரோடு மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் ஆத்மா மின் மயானம் இயங்கி வருகிறது. ஈரோடு மாநகரில் இறப்பவர்களின் உடல்கள் இங்கு எரியூட்டப்பட்டு உறவினர்களுக்கு அஸ்தி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த மின் தகன மேடைக்கு இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்பட்டு வருகிறது. கிராம புறங்களில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்ட நீண்ட நேரம் ஆகும் என்பதால் இங்கு கொண்டு வரப்பட்டு விரைவில் எரியூட்டப்படுகிறது.
இதனால் தினமும் நேரம் ஒதுக்கி இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நடமாடும் தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் தகன மேடையை வடிவமைத்து கொண்டு வந்து உள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் இடத்துக்கே இந்த தகன மேடை வாகனம் மூலம் கொண்டு சென்று கியாஸ் மூலம் எரியூட்டலாம்.
இது குறித்து ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது-
கருங்கல் பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் ஆத்மா மின்மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம பகுதிகளிலும் ஆத்மா மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். கிராம புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். மேலும் தகனம் செய்ய 8 மணி நேரம் தேவைப்படும். தற்போது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் இறந்தவரின் உடலை எரியூட்டி அஸ்தி வழங்கப்படும். நடமாடும எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.
முழுக்க முழுக்க கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டுமே நிறுத்தி எரியூட்டப்படும். இந்த வாகனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.7500 மட்டும் வசூலிக்கப்படுகிறது. தற்போது 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரம் இந்த வாகனத்தை கொண்டு செல்ல முடிவு செய்து உள்ளோம்.
மேலும் இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை பதிவு செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 96557 19666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பதிவுசெய்யும் நபர்கள் உறுதி மொழி பத்திரம், அடையாள அட்டை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடமாடும் தகன மேடை தமிழகத்திலேயே ஈரோட்டில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா ஆத்மா அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுனர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று நடமாடும் தகன வாகனத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தங்கவேலு, பொருளாளர் சரவணன், சிவானந்தம்,சத்தியமுர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ்,பொருளாளர் ஞானமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






