என் மலர்
நீங்கள் தேடியது "திருமாவளவன் வலியுறுத்தல்"
- கவர்னர் இங்கு தமிழக அரசிற்கு எதிராக ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.
- தலித் மக்களுக்கு என கொடுக்கப்பட்ட காலிமனை பட்டாக்களில் குடியேற முடியவில்லை.
கிருஷ்ணகிரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மாலை கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டிசம்பர் 6-ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்த நாளில் அம்பேத்கருக்கு வீர வணக்கம் செலுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வேண்டும்.
தமிழ் மண்ணில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு எதிராக இடம் கொடுக்ககூடாது. மக்களவையில் வருகிற 6-ந் தேதி கூடும் குளிர்கால கூட்டத்தொடரில், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேச இருக்கிறோம்.
குறிப்பாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடைசெய்யக்கூடிய சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
கவர்னர் இங்கு தமிழக அரசிற்கு எதிராக ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார். அவரை தமிழகத்தில் இருந்து திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆணவ கொலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். மேலும், மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்பவர்களுக்கு அவரவர் மாநிலத்தில் மட்டுமே வாக்குரிமை அளிப்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.
தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என நம்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிராமங்களில் தலித் மக்களுக்கு என கொடுக்கப்பட்ட காலிமனை பட்டாக்களில் குடியேற முடியவில்லை. கோர்ட்டில் வழக்கு போட்டு காலம் கடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் பொ. மு நந்தன், தர்மபுரி சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன், மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






