என் மலர்
நீங்கள் தேடியது "பணத்துக்காக மகனை விற்ற பெண்"
- மம்தா தனது 2 குழந்தைகளுடன், தாய் வீடான பல்லூருக்கு சென்று விட்டார்.
- என் மகன் கண்டிப்பாக வேண்டும் என கூறி மகனை கொடுக்க மறுத்துள்ளார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜெய்நகரைச் சேர்ந்தவர் பாலாமணி. பெயிண்டர். இவர் கடந்த 2012-ம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே பல்லூரைச் சேர்ந்த மம்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு முதலில், மாற்றுத்திறனுடன் ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுமந்த் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் கடந்த 2020-ம் ஆண்டு கணவனை பிரிந்த மம்தா தனது 2 குழந்தைகளுடன், தாய் வீடான பல்லூருக்கு சென்று விட்டார்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பாலாமணி தனது குழந்தைகளை பார்ப்பதற்காக, பல்லூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, மனைவியுடன் மகள் மட்டுமே இருந்துள்ளார். மகனை காணவில்லை. அதற்கு மம்தா சரியான பதில் கூறவில்லை.
மேலும் மக்களை கணவரிடம் ஒப்படைத்து விட்டு மாயமாகிவிட்டார். இதன் பின்னர், பாலாமணி தனது மகளுடன் ஜெய்நகருக்கு சென்று விட்டார். பின்னர் தனது மகன் எங்கே இருக்கிறான் என தொடர்ந்து தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு மம்தா தனது மகனை விற்பனை செய்தது, அந்த குழந்தை ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் இருப்பதாகவும், பாலாமணிக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, பாலா மணி, பாஸ்கர் ராவின் உதவியுடன் கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனைக் கண்டுபிடித்து கொடுக்க புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், ஈரோடு சென்று பாலாமணியின் மகன் சுமந்தை மீட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையாக இருந்த போது விற்கப்பட்ட சுமந்துக்கு தற்போது 5 வயதாகி உள்ளது. அவனது வளர்ப்பு பெற்றோர், அவனுக்கு செல்வமணி என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த குழந்தை, அவனை வளர்த்தவர்கள் மற்றும் சிறுவனின் பெற்றோரான பாலாமணி, மம்தா ஆகியோரை அத்திப்பள்ளி போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, குழந்தையை வாங்கியவர்கள் தாங்களே அவனை நன்றாக வளர்க்க எனக்கூறி பாலாமணி மற்றும் மம்தா ஆகியோரின் கால்களில் விழுந்து கதறி அழுதனர்.
ஆனால், பாலாமணியோ ஊனமுற்ற தனது மகளுக்கு சகோதரன் தேவை. அதனால் எனக்கு என் மகன் கண்டிப்பாக வேண்டும் என கூறி மகனை கொடுக்க மறுத்துள்ளார்.
நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின் சிறுவனை வளர்த்தவர்கள் அவனை பெற்றோரிடம் விட்டு சோகத்துடன் சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






