என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம்"

    • திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுமுதல் விதிமீறும் வாகனஓட்டுனர்களிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியது.
    • ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளும் மீறப்பட்டு விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.

    இதனைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது. அதன்படி பல்வேறு விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாநகரங்களில் கடந்த 26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

    இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்றுமுதல் விதிமீறும் வாகனஓட்டுனர்களிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியது.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி, காவலர்கள் பாண்டியராஜன், பாலகுமார், அடங்கிய போலீசார் நகரின் 15 இடங்களில் வாகன ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

    இதுகுறித்து நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் வாகன ஓட்டிகளிடம் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகை குறித்து துண்டுபிரசுரம் மூலம் எடுத்துகூறப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி இன்றுமுதல் விதிமீறி வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1000, ஒரு வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ.1000, செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரூ.1000, மீண்டும் அதேதவறை செய்தால் ரூ.5000, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.5000, கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000, நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500, மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.1500, ஆட்டோக்களில் சீருடை அணியாவிட்டால் ரூ.500, அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.500 என அபராத தொகை ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் நகரில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமலும், ஒரு வாகனத்தில் 2-க்கும் மேற்பட்டோர் செல்வதும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது போன்ற விதிமீறல் சம்பவங்களே அதிகளவில் நடக்கிறது.

    இதுபோன்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது சரியே என்று ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், பெரும்பாலோனார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், அபராதம் விதிப்பது என்பது வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் விபத்துகள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

    அபராதம் வசூலிப்பது மிரட்டுவதற்கோ, பணம் வசூலிப்பதற்கோ இல்லை. போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான பயணமாக அமையும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் என்றனர்.

    ×