என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் கண்டுபிடிப்பு"

    • விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது.
    • மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கோவிலில் இருந்த விநாயகர் சிற்பம் 1000 ஆண்டுகள் பழமையானது எனவும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிற்பம் 3 அடி உயரமும், 1 ½ அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். தலையில் கரண்ட மகுடம் தரித்தும் அகன்ற 2 காதுகளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிற்பமானது நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த விநாயகர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டு உள்ளது. முன் மண்டபத்தூணில் 2 ஆண் சிலை ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இரு கை கூப்பி வணங்கியபடி உள்ளது. அதில் ஒருவர் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர். இவர் கி.பி.1623-1659 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளார். இவரது காலத்தில் தான் எந்த ஒரு கோவில் பணி செய்தாலும் அங்கு தனது உருவச்சிலையை இரு கை கூப்பி அந்த தெய்வத்தை வணங்கியபடி வைப்பது வழக்கம். இங்கும் அதுபோல் வணங்கியபடி சிலை உள்ளது. இந்த கோவிலின் முன் மண்டபம் அவரால் கட்டப்பட்டு இருக்கலாம். மற்றொருவர் அவரது பிரதானியாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவில் பழமையான பெரிய கோவில் ஆகும்.
    • திருடுபோன 9 சிலைகளில், 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

    சென்னை:

    தமிழக கோவில்களில் திருடுபோன நிறைய சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள். அவற்றை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் திருடுபோன 9 சிலைகளில் 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவில் பழமையான பெரிய கோவில் ஆகும். இதன் அருகே வேணுகோபால சுவாமி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் இருந்த விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய 3 சிலைகள் பாதுகாப்பு கருதி, விஸ்வநாத சுவாமி கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 சிலைகளும் திருடு போய்விட்டன. உண்மையான சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதில் 3 போலியான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதற்கிடையில் விஸ்வநாதசுவாமி கோவிலில் ஏற்கனவே உள்ள யோக நரசிம்மா், விநாயகர், நடனம் ஆடும் கிருஷ்ணர், நடனம் ஆடும் சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற கோலத்தில் உள்ள விஷ்ணு ஆகிய 6 சிலைகள் உண்மையான சிலைகளாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அந்த 6 சிலைகளும் போலியானவை என்பதும், உண்மையான சிலைகள் திருடுபோய் இருப்பதும் தெரியவந்தது.

    இந்த 6 சிலைகளில் யோக நரசிம்மா், விநாயகர் ஆகிய 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டறிந்தனர். ஆக திருடுபோன 9 சிலைகளில், 5 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அவற்றை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கூறினார்கள். மீதம் உள்ள 4 சிலைகளும் அமெரிக்காவில்தான் உள்ளதா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ×