என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைபாதையில் கடைகள் ஆக்கிரமிப்பால் தரையில் அமரும் பயணிகள்"

    • வியாபாரிகளாலும் நடை பாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.
    • இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், வத்தல்மலையை சுற்றி பொட்டலாங்காடு, சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    கடல் மட்டத்தில் இருந்து 1418 மீட்டர் உயரம் உள்ள இந்த பகுதி தருமபுரியில் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தல் இருந்து வத்தல்மலையில் உள்ள கிராமங்களுக்கு 14 கிலோ மீட்டர் மலை பாதையில் 24 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த மலை கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டி சுமார் 75 ஆண்டுகளாக போராடி வந்தனர்.

    இதனையறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே வத்தல்ம லைக்கு வருகைபுரிந்து அங்குள்ள மலை கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுக்கு சாலை வசதி இல்லாததை அறிந்து அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து மலை கிராமத்திற்கும் சாலை வசதிகளை மேம்படுத்தி போக்குவரத்து வசதி ஏற்படுத்தபடும் என அறிவித்திருந்தார்.

    இதையடுத்து அங்கு 1 கோடியே 88 லட்சம் மதிப்பில் சாலை வசதி ஏற்படுத்தபட்டு பணிகள் நிறைவு செய்யபட்டது. அதனை தொடர்ந்து இதுவரை பேருந்து வசதி பெறாத அந்த மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த புதிய வழித்தடத்தில் தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து வத்தல்மலைக்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    வத்தல்மலை கிராமத்து மக்கள் பயன் பெரும் வகையில் காலை பென்னாகரத்தில் இருந்து புறப்பட்டு தருமபுரி பஸ் நிலையம் வரும் பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 7.30 முதல் எட்டு மணிக்குள் வத்தல் மலையை சென்று அடைகிறது.

    அங்கு இருந்து வத்தல் மலையில் உள்ள உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவர்கள், அன்றாட பணிக்கு வரும் பொதுமக்கள், அனைவரையும் ஏற்றிக்கொண்டு தருமபுரி பஸ் நிலையம் வந்து மீண்டும் தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து 12 மணி மற்றும் 4.30 மணிக்கு வத்தல்மலை சென்று இரவு 8 மணிக்கு தருமபுரி பஸ் நிலையத்தை வந்து அடைகிறது.

    வத்தல்மலை பொதுமக்களின் நீண்ட கால கனவை பூர்த்தி செய்த இந்த பேருந்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பாலக்கோடு பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதால் அங்கு வத்தல்மலை செல்லும் பயணிகள் நிற்பதற்கு இடமின்றி மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு நிழல் கூடத்தில் அமருவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

    நிழற்குடங்கள் அனைத்தும் அங்குள்ள வியாபாரிகளாலும் நடை பாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

    அதனால் சேலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கும் மழை வெயில் காலங்களில் பாதுகாப்பாக பயணிகள் இருப்பதற்கும் இடவசதி இருப்பதால் வத்தல் மழை பேருந்தை சேலம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு சேலம் கோட்ட போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வத்தல்மலை செல்லும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    ×