என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்"
- சத்யாவுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது.
- முதல்-அமைச்சர் உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சூளாமலை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கொட்டாயை சேர்ந்தவர்கள் சகாதேவன்-லட்சுமி தம்பதி. இவர்களுக்கு, 17 வயதில் மஞ்சு என்ற மகனும், சத்யா என்ற 14 வயது மகளும் உள்ளனர்.
இவர்களில் சத்யா சூளாமலை அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். மேலும் பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் பள்ளி அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாநில அளவிலான, 42 மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றார். இதைத் தவிர கடந்த, 2018-ம் ஆண்டு 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், கலந்து கொண்டு மாநில அளவில் ஏழாவது இடம் பிடித்தார். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்று, 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சத்யாவிற்கு முதுகுபகுதியில் திடீரென்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, சேலம் தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்தனர். அதில், சத்யாவுக்கு முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சத்யாவுக்கு கடந்த, 2021-ம் ஆண்டு ஜூலை, 15-ந் தேதி புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இரண்டரை மாதங்கள் சிகிச்சைக்கு பின்கடந்த, 2021-ம் செப்டம்பர் மாதம் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் மாணவி சத்யா நடக்க சிரமப்பட்டார். அவருக்கு அதே ஊரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் சத்யாவுக்கு நடைபயிற்சி, அளித்து வந்த நிலையில் கடந்த, ஜூலை மாதம் முதல் சத்யாவுக்கு மீண்டும் முதுகுவலி ஏற்பட்டது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பரிசோதித்த போது மீண்டும் கட்டி வளர்ந்திருப்பது தெரிந்தது.
தற்போது சத்யாவுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய், மூன்றாவது நிலையை எட்டியதால் மருத்துவ செலவிற்கு, 30 லட்சம் ரூபாய் ஆகும் எனவும், இதில், 5 லட்சம் ரூபாய் சத்யா தரப்பில் கட்டினால், 20 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு திட்டத்தில் கிடைக்கும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் நிலத்தை அடகு வைத்து, 1 லட்சம் ரூபாய் கட்டினார்கள். மேலும் தனது மகளை காப்பாற்ற தமிழக முதல்-அமைச்சர் உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






