என் மலர்
நீங்கள் தேடியது "குட்கா கடத்திய வாலிபர் கைது"
- மகராஜகடை போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போகனப்பள்ளி -பூசாரிப்பட்டி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பகுதியில் குட்கா கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மேற்பார்வையில், மகராஜகடை போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் போகனப்பள்ளி -பூசாரிப்பட்டி சாலையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஸ்கூட்டரில், 10 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜிகேந்திர படேல் (வயது 24) என்பதும், வட மாநிலத்தைச் சேர்ந்த அவர் கிருஷ்ணகிரி நகரில் கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் போகனப்பள்ளி சுடுகாடு அருகே உள்ள குடோனில் இருந்து குட்காவை பதுக்கி வைத்து, அவ்வப்போது கடைக்கு புகையிலை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மகராஜகடை போலீசார் ஜிகேந்திரபடேல் கூறிய குடோனுக்கு சென்று அதிரடி சோதனையிட்டனர். அதில் குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மொத்தம் 350 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த மகராஜகடை போலீசார் ஜிகேந்திர பட்டேலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.






