என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தகவல்"

    • மின் பழுது காரணமாக அணையின் கதவு இயக்கம் நிறுத்த இயலாத நிலையில் பிரதான கதவின் இரும்பு கயிறு அறுபட்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • இப்பழுதுகள் 6 முதல் 7 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மாரம்பட்டி கிராமத்தில் உள்ள பாம்பாறு அணைப் பகுதியில் தொடர் மழை காரணமாக பாம்பாறு அணை 4-வது பிரதான கதவில் ஏற்பட்ட மின் பழுது காரணமாக, பாம்பாறு அணையை மாவட்ட கலெக்டர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பாம்பாறு அணையில் கடந்த 18.6.2022 அன்று அதன் வெள்ள அபாய நிலையினை எட்டியதால் உபரி நீர் பாம்பாற்றில் தொடர்ச்சியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 31.8.2022 அன்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பிரதான கதவு 4-ல் உபரி நீர் திறந்து விட பிரதான கதவு இயக்கப்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மின் பழுது காரணமாக அணையின் கதவு இயக்கம் நிறுத்த இயலாத நிலையில் பிரதான கதவின் இரும்பு கயிறு அறுபட்டு அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அணைக்கு கீழுள்ள பிரிவு அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றம் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அணைக்கு 1.9.2022 அன்றைய நிலையில் வினாடிக்கு 2,640 கன அடி தண்ணீர் வீதம் வந்து கொண்டுள்ளது. வினாடிக்கு 3,818 கன அடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து, மதகு சரி செய்ய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பழுதினை சாpசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பழுதுகள் 6 முதல் 7 நாட்களுக்குள் சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின்போது, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறி யாளர் (நீர்வள ஆதாரம்) மணிமோகன், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர் அமானுல்லா, உதவி பொறியாளர்கள் ஜெய குமார், கார்த்திகேயன், வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×