என் மலர்
நீங்கள் தேடியது "கருணாநிதி சிலை அமைப்பு"
- மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
- பீடத்துடன் சுமார் 30 அடி உயரத்தில் நிறுவப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வேலூர் சாலை பிரியும் பகுதியில் இருந்த பழைய அண்ணா நுழைவு வாயில் அகற்றப்பட்டு புதியதாக பிரம்மாண்டமாக அண்ணாநுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அருகில் தனியார் இடத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த சிலை அமைக்கப்படும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என்றும், சிலை கட்டுமானம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிலை அமைக்கும் பணிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று பீடம் அமைக்கப்பட்டு கிரேன் மூலம் பீடத்தில் கலைநயமிக்க முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.
இது பீடத்துடன் சேர்த்து சுமார் 30 அடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சிலை நிறுவப்பட்டு உள்ளதை நேற்று மதியம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது முன்னாள் நகரமன்றத் தலைவர் ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். கருணாநிதி சிலையும், புதியதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா நுழைவு வாயிலையும் திருவண்ணாமலைக்கு விரைவில் வர இருக்கும் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.






