என் மலர்
நீங்கள் தேடியது "சாலையில் விரிசல்"
- பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
- சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம் சென்னை பாடியில் இருந்து - ரேனிகுண்டா வரை 124 கி.மீ., தூரம் ஆறுவழிச்சாலை பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதில் சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்தூர் - ரேனிகுண்டா வரையும் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர்-திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் சாலை அமைக்கும் பணி சுமார் 80 சதவீதம் முடிந்து உள்ளன.
மேலும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட, திருநின்றவூர் வரை ஏரிகள் மற்றும் சாலைகள் குறுக்கிடும் இடம் என 7 இடங்களில் மேம்பாலம் மற்றும் 10 இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. சாலை அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் முக்கிய ஊர்களை இணைக்கும் இடங்களில், 'சர்வீஸ்' சாலையும் அமைக்கப்பட்டு வழிகாட்டி பலகை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனினும் இந்த சாலைப்பணி உரிய தரம் இல்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள பக்கவாட்டு சுவர்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மண் அப்படியே உள்வாங்கியதால் பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். அருகில் மற்றும் தலக்காஞ்சேரி, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, காக்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேம்பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் மண் உள்வாங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் விட்டு, விட்டு சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கேரளா மட்டுமின்றி கூடலூரிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையொட்டி பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவின் பெருந்தல்மன்னா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய இடங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர்- கேரள எல்லையான கீழ்நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் நெடுஞ்சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கோட்ட பொறியாளர் நஸ்ரீன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து அந்த வழியே சரக்கு லாரிகள் உள்பட கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மேலும் கூடலூர்- கேரள சாலையில் ஏற்பட்ட விரிசல் 80 மீட்டர் நீளத்துக்கும் 2 அடி அகலத்துக்கும் பெரிதாகியது. எனவே அந்த வழியாக கார்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
மழை தொடரும் பட்சத்தில் சாலை துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் கூடலூரில் இருந்து வயநாட்டிற்கு வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. தற்போது மலப்புரத்துக்கு செல்லும் சாலையும் துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடகா மற்றும் ஊட்டியில் இருந்து வந்த சரக்கு லாரிகள் கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடலூர்- கேரள வழியாக அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கூடலூர் பகுதியில் மழை சேதத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அப்போது கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை விழுந்த பகுதி மற்றும் தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்கு சென்றார்.
பின்னர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கூடலூர்- கேரள சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டார்.
பின்னர் விரிசலை விரைந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






