என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கட்டிடம் விபத்து"

    • கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
    • இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா நகரமான சிடோர்ஜோவில் இஸ்லாமிய பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஒரு பகுதியில் கட்டிட விரிவாக்க பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் மாணவர்கள் தொழுகை நடத்தி கொண்டிருந்தபோது பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் ராட்சத கான்கிரீட்கள் சரிந்தன. இதன் இடிபாடுகளில் ஏராளமான மாணவர்கள் சிக்கி கொண்டனர்.

    உடனே போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். 99 மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இடிபாடுகளில் பல உடல்களைக் கண்டதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலோர் ஆண்கள் ஆவார்கள். கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் மாணவிகள் தனியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் 65 மாணவர்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 7 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களை உயிருடன் வைத்திருக்கிறோம். அவர்களை மீட்க போராடி வருகிறோம். உயிருடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றனர்.

    இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் முன்பு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அழுதபடி திரண்டுள்ளனர்.

    இதற்கிடையே கட்டிடத்தின் 3-ம் மாடியில் கட்டுமான ஊழியர்கள் சிமெண்ட் கலவையை ஊற்றிய பிறகு கட்டிடம் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நைஜீரியாவில் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். #NigeriaSchoolBuilding #Collapsed
    அபுஜா:

    நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள இட்டா பாஜி நகரில் 4 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின், 4-வது தளத்தில் பள்ளிக்கூடம் இயங்கிவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கட்டிடத்தின் மற்ற தளங்களில் மக்கள் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று காலை சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென அந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    மாணவர்களின் அலறல் சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் என அனைவரும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

    இந்த கோர சம்பவத்தில் 12 மாணவர்கள்,  பள்ளியின் உரிமையாளர், ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுமார் 60 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக, தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    மீட்புப்பணிகள் நேற்று முடிவடைந்த நிலையில், இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் சேதமடைந்த கட்டிடமாக அடையாளம் காணப்பட்டு இடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்ததாக மாகாண கட்டிட கட்டுப்பாடு முகமை கூறியுள்ளது.

    இச்சம்பவத்திற்கு நைஜீரிய அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #NigeriaSchoolBuilding #Collapsed
    ×