search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "semmaram tree"

    ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் காவலாளியை கட்டிப்போட்டு செம்மரக் கட்டைகளை 4 பேர் கும்பல் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #semmaram

    வாலாஜா:

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்புக்கு நடுவில் வனச்சரக அலுவலகம் உள்ளது. வனச்சரக அலுவலகம் எதிரில் கோர்ட்டும் உள்ளது. வனச்சரகராக இருந்த விஜய், கடந்த 7-ந் தேதி பணியிடமாற்றப்பட்டார்.

    தற்போது, கந்தசாமி என்பவர் வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். விஜய் வனச்சரகராக இருந்த போது 3 மாதத்திற்கு முன்பு வாலாஜா ஜே.ஜே. நகரில் 750 கிலோ எடை கொண்ட 17 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தார்.

    இந்த செம்மரக்கட்டைகள் வனச்சரக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு நேர காவலாளியாக, கத்தாரி குப்பம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் என்பவர் (வயது 59) உள்ளார்.

    நேற்றிரவு சம்பத் வழக்கம் போல் காவல் பணியில் இருந்தார். நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.

    அப்போது, 4 பேர் கும்பல் வந்தனர். காவலாளியை கை, கால்களை கட்டி தூக்கி கொண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் உள்ளே தள்ளி பூட்டினர்.

    வனச்சரக அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்திய காட்சி.

    பிறகு, வனச்சரக அலுவலக வளாகத்தில் இருந்த 17 செம்மரக் கட்டைகளில் ½ டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை தங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி கொண்டு தப்பிச் சென்றனர். கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை 3.30 மணியளவில் வனச்சரக அறையில் இருந்து காவலாளி அலறிய சத்தம் கேட்டு, போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் சென்று பார்த்தார்.

    அப்போது அறையில் கை, கால்கள் கட்டிய நிலையில் கிடந்த காவலாளியை கட்டை அவிழ்த்து மீட்டார். தகவல் அறிந்த டிஎஸ்.பி. கலைச் செல்வம் மற்றும் வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வனச்சரக அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாவட்ட உதவி வன பாதுகாவலர்கள் பால சுப்பிரமணியம், சரவணன் ஆகியோரும் விரைந்து வந்து கடத்தல் சம்பவம் குறித்து காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #semmaram

    ×