search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjita Chanu"

    • சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல.
    • 2020-ம் ஆண்டும் இதே பிரச்சினையில் சிக்கினார்.

    புதுடெல்லி:

    குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பளு தூக்குதல் வீராங்கனையான சஞ்ஜிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சோதனை நடத்தியது. இதில் அவர், தடை செய்யப்பட்ட ட்ரோஸ்டனோலோன் மெட்டாபொலிட் என்ற மருந்தை எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் 4 ஆண்டுகளுக்கு சஞ்ஜிதா சானு பங்கேற்க தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதை இந்திய பளுதூக்குதல் சங்கத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவும் உறுதி செய்துள்ளார். தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் தடையால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சஞ்ஜிதா சானு இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 48 கிலோ எடை பிரிவிலும், 2018ம் ஆண்டு கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 53 கிலோ எடைப் பிரிவிலும் சஞ்ஜிதா சானு தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல. மணிப்பூரைச் சேர்ந்த அவர்,கடந்த 2018ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போது ஊக்க மருந்து விவகாரத்தால் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் தடையை எதிர்கொண்டார். 2020-ம் ஆண்டும் இதே பிரச்சினையில் சிக்கினார்.

    • சஞ்சிதா சானுவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

    இனி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்படலாம். அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும்.

    மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu #Weightlifter
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவு கடந்த ஆண்டு மே 15-ந் தேதி வெளியானது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான ஊக்க மருந்து புகாரை சஞ்சிதா சானு திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். மே மாதம் இறுதியில் சஞ்சிதா சானுவின் ஊக்க மருந்து சோதனையில் (மாதிரியில் மாற்றம்) தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 25 வயதான சஞ்சிதா சானு கூறுகையில், ‘எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளன விசாரணை கமிட்டியிடம் இருந்து சாதகமான முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இந்த சோகத்தால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதுடன், எனது ரெயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விடலாமா? என்று கூட நினைத்தேன். என்னால் சரியாக சாப்பிட முடியாமல் போனதுடன், தூக்கத்தையும் தொலைத்தேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றதானது. மீண்டும் களம் திரும்பி நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆண்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும், 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறேன்’ என்றார்.  #SanjitaChanu #Weightlifter
    சஞ்சிதா சானு ஊக்க மருந்து விவகாரத்தில் நிர்வாக தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. #SanjitaChanu
    புதுடெல்லி:

    2014 மற்றும் 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக ஊக்க மருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் சேகரித்தது.

    இந்த ஊக்க மருந்து சோதனையின் முடிவை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் கடந்த மே மாதம் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் சமர்ப்பித்தது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் சஞ்சிதா சானுவை இடைநீக்கம் செய்தது. தான் எந்தவித ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை என்று மறுத்த சஞ்சிதா சானு, அந்த சோதனை மாதிரி என்னுடையது தானா? என்பதை அறிய டி.என்.ஏ.சோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தங்களது நிர்வாக குளறுபடியால் சஞ்சிதா சானு ஊக்க மருந்து விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. வீராங்கனையிடம் இருந்து சேகரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுநீர் மாதிரியின் நம்பர் மாறியதால் இந்த தவறு நேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் நிம்மதி அடைந்துள்ள சஞ்சிதா சானு, இந்த தவறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  #SanjitaChanu
    ‘நான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’ என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்தார். #weightlifting #SanjitaChanu
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அப்பாவி. எந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எதுவும் நான் எடுத்து கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’ என்று தெரிவித்தார். #commonwealthgames2018 #weightlifting #SanjitaChanu
    ×