என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of health damage"

    • எம்.எல்.ஏ., அதிகாரிகள் ஆய்வு
    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி 2வது வார்டு சித்தூர் கேட் 4வது புதுஆலியார் தெரு பள்ளம் பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதாகவும், மழைக்காலங்களில் மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்புகள் சுற்றி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதாகவும். மேலும் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும் இது குறித்து அப்பகுதிப் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்டித் தர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் புது ஆலியார்தெரு பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்கள் கட்டிதர வேண்டும் எனவும் வெளிப்பகுதியில் இருந்து கழிவுநீர் இப்பகுதியில் புகுவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது பொதுமக்களிடம் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் அன்வர்பாஷா, ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி, சீஊர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×