search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice planting"

    • 55,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மக்காச்சோளம், காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்ந அணை மூலம் புதிய ஆயக்கட்டு மற்றும் அமராவதி ஆற்றின் பழைய ஆயக்கட்டின் 8 ராஜ வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் மக்காச்சோளம், காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. புதிய ஆயக்கட்டில் கரும்பு, பீட்ரூட் போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கி தீவிரமடைந்ததை அடுத்து அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 15ந்தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து புதிய ஆயக்கட்டு மற்றும் அமராவதி ஆற்றின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் கல்லாபுரம், ராமகுளம், காரதொழுவு, கணியூர், சோழமாதேவி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவு பணிகளுக்காக வயலை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்‌. இப்பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்படும் என்பதால் அதற்கு தேவையான உரங்களை வேளாண் துறை போதிய அளவு கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    தற்போது விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களின் தேவை இப்பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது அமராவதி பாசனப் பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பெய்துள்ளதாலும், முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அதிக பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×