search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public viewing"

    வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக 3 புலிக்குட்டிகள் விடப்பட்டன. #VandalurZoo
    வண்டலூர்:

    வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வண்டலூர் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும் வெள்ளை மரபணு உடைய 3 குட்டிகள் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி பிறந்தன.

    அதில் 2 குட்டிகள் அடர் வரிகளை பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்பட்டன. மற்றொரு பெண் குட்டி அதன் தாயையொத்து வெண்ணிறத்தில் உள்ளது.

    3 மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் பொதுமக்களின் பார்வைக்கு தனி விலங்கு கூடத்தில் விடப்பட்டுள்ளது. இந்த குட்டிகளுடன் சேர்த்து புலிகளின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

    வண்டலூர் பூங்காவில் கோடை காலத்தை சிறப்பாக கழிக்க பார்வையாளர்களுக்காக சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பூங்கா கடை ஒன்றை திறந்து அதில் விலங்குகளின் படங்கள் பொறித்து நினைவுப்பொருட்கள், சாவிக்கொத்து, குல்லா, பனியன்கள், பொம்மைகள் முதலான பொருட்கள் பார்வையாளர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வெகுவிரைவில் இந்த கடையில் விலங்கு சார்ந்த நிறைய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளன. முப்பரிமாண படக்காட்சியான வன உலாவிடம் கடல் நீரடி காட்சிகள் பூங்காவில் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று, ஏராளமான பார்வையாளர்கள் கண்டுக்களித்து தங்களது வருகையை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #VandalurZoo

    வேலூர் கோட்டையில், இலங்கை கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரமராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த கண்டி மஹால் பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் ராமன் நேற்று திறந்து வைத்தார்.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் திப்பு மஹால், ஐதர்மஹால், பாஷா (ராஜா) மஹால், பேகம் (ராணி) மஹால், மற்றும் கண்டிமஹால் என 5 மஹால்கள் (சிறிய அரண்மனைகள்) உள்ளன.

    பாஷா மஹால், பேகம் மஹால் ஆகிய 2 கட்டிடங்களும் 1991-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கண்டி மஹாலில் இலங்கையில் உள்ள கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கன் 17 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலேயே மரணமடைந்தார்.



    இந்த கண்டி மஹாலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கக்கோரி கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில், தூய்மை பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா துறையின் மூலம் வேலூர் கோட்டையில் நேற்று மாணவ-மாணவிகள் பங்கேற்ற தூய்மை பணிகளில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பொதுமக்கள் பார்வைக்காக கண்டி மஹாலையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் உள்ளே சென்று அங்குள்ள அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் இருந்த தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர்கள் கண்டி மஹாலில் தூய்மை பணி முடித்து மின்சார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அருங்காட்சியகம், மாநகராட்சி மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கலெக்டர் ராமன் சுற்றுலா துறையின் மூலம் குப்பை தொட்டிகள் வழங்கினார். இதையடுத்து என்.சி.சி. மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர், டி.கே.எம். கல்லூரி, முத்துரங்கம் கலைக்கல்லூரி மற்றும் ஊரீசு கல்லூரிகளை சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு குப்பைகளை அப்புறப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜான் பிரிட்டோ, தொல்லியல் துறை உதவி பராமரிப்பு அலுவலர் ஈஸ்வர், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்விகள்) வளர்மதி, ஜலகண்டேஸ்வரர் கோவில் செயலாளர் சுரேஷ், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×