search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ponneri area"

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர் கதையாகி வருகிறது. பகல், இரவு பாராமல் துண்டிக்கப்படும் மின்சாரம் பல மணி நேரம் தடை படுவதால் பொதுமக்கள் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    மின்தடையால் பல இடங்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அரசூர், பொன்னேரி, மெதூர், தடப் பெரும்பாக்கம், வேன்பாக்கம், இலவம்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளானார்கள். இரவில் புழுக்கத்தால் தெருக்களில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 12 மணி நேர மின்தடை குறித்து மின் ஊழியர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது உரிய பதில் கூறவில்லை.

    இதற்கிடையே அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்து உள்ளோம். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மோட்டார்கள் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதேபோல் மின்தடையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொன்னேரி போலீஸ் நிலையத்திலும் விவசாயிகள் மனு அளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி கோட்ட உதவி செயற் பொறியாளர் பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    கடந்த 11-ந் தேதி வேண் பாக்கம் துணை மின்நிலை யத்தில் டிரான்ஸ்பார்ம் வெடித்து விட்டது. இது பொருத்தப்பட்டு இரண்டு மாதம் தான் ஆகிறது இதை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை அல்லது நாளை பணி முடிவடையும். அதன்பின் சீராக மின் சாரம் வழங்கப்படும். அதுவரை பொன்னேரி துணை மின் நிலைய கோட்டத்தில் உள்ள ஆலாடு அரசூர், மேட்டுப் பாளையம், இலவம்பேடு, பெரும்பேடு, பொன்னேரி, தேவதானம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுழற்சிமுறையில் மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×