search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pomd"

    • ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில் 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள மழை நீர் ஓடைகள் வாயிலாக இக்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்து வந்தது.பருவமழை பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஆண்டில் பல மாதங்கள் தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படும். சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தென்னை சாகுபடியும் பாதிக்கும் சூழ்நிலை இருந்தது.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன்னர், பாலாற்றின் வாயிலாக பூசாரிநாயக்கன்குளத்துக்கு நீர்வரத்து கிடைத்தது. அதன் அடிப்படையில் பி.ஏ.பி., துணை அமைப்பாக குளத்தை சேர்த்து தண்ணீர் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.நீண்ட கால போராட்டத்துக்குப்பிறகு கடந்த 2012 முதல் பி.ஏ.பி., கால்வாய் வழியாக குளத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    தற்போது மண்டல பாசன காலத்தில், அரசாணை அடிப்படையில் பூசாரிநாயக்கன்குளத்துக்கு, பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் தற்போது குளத்தின் கரை, புதர் மண்டி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் வெளியேற்றப்படும் ஷட்டர், உபரி நீர் வெளியேறும் பகுதி மற்றும் கரையிலுள்ள மரங்கள், திறந்தவெளி பாராக குடிமகன்களால் பயன்படுத்தப்படுகிறது.

    அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் கரையிலும், குளத்து நீரிலும் வீசப்பட்டுள்ளது. மேலும் இறைச்சி கழிவுகளையும், மூட்டையாக கட்டி தண்ணீரில் வீசுவதும் அதிகரித்துள்ளது.இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து, குளத்தின் கரையில் புதர்களை அகற்ற வேண்டும். குளத்து நீர் மாசடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×