search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oil pipe"

    • கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்,
    • தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காங்கயம்:

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கரூர் வரை சாலையோரமாகவும், விவசாயம் இல்லாத நிலங்கள் வழியாகவும் இரும்பு குழாய் பதித்து எரிவாயு மற்றும் குருடு ஆயில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் கிராம பகுதியில் நிலத்தின் கீழ் ஏற்கனவே செல்லும் இரும்பு குழாயில் இருந்து புதிதாக பெங்களூரு, தேவனகொந்தி வரை 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய் பதித்து ஆயில் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்ட அறிக்கையை தயார் செய்து உள்ளது.

    அதன்படி இந்த குழாய் முத்தூர் அருகே சாந்தலிங்கபுரம், நம்பகவுண்டன்பாளையம், மலையத்தாபாளையம் பகுதி கீழ்பவானி பாசன விவசாய விளைநிலங்களில் சுமார் 10 அடி ஆழத்தில் 45 அடி அகலத்தில் குழிதோண்டி குழாய் பதித்து மேட்டுக்கடை வரை கொண்டு சென்று பின்னர் மீண்டும் சாலையோரத்தில் பெங்களூரு வரை கொண்டு செல்லப்படுகிறது.

    இதனால் வேளாண் நிலம் பாதிக்கப்படும் என்றும், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முத்தூர் பகுதி விவசாய விளை நிலங்களை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் எம்.பி.யிடம் மாற்று வழியாக சாந்தலிங்கபுரத்தில் இருந்து சாலையோரம் வழியாக குழாய் பதித்து ந.கரையூர் ஓடை பாலம் வரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட அ.கணேசமூர்த்தி எம்.பி. இதுபற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவன திட்ட தலைமை அதிகாரி ராபின் மற்றும் என்ஜினீயர்கள் குழுவினர் முத்தூர் கீழ்பவானி பாசன பகுதியில் குழாய் வழியாக ஆயில் கொண்டு செல்லப்பட உள்ள கீழ்பவானி பாசன விளை நிலங்களை நேரில் பார்வையிட்டனர். அப்போது எம்.பி. மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் விளை நிலங்கள் வழியாக குழாய் பாதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து ஆயில் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ×