search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NRN"

    • அரசு மற்றும் பொது துறைகளில் வாரத்திற்கு 5 நாட்கள்தான் வேலை தினங்கள்
    • தற்போது ஐடி துறையில் நாளைக்கு 10-11 மணி நேரம் பணியாற்றுகின்றனர்

    இந்திய தகவல் தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ் (Infosys). இதன் நிறுவனர்களில் ஒருவர், தற்போது 77 வயதாகும் பிரபல இந்திய கோடீசுவரரான என்ஆர் நாராயண மூர்த்தி (NR Narayana Murthy).

    கடந்த 2023 அக்டோபர் மாதம், என்ஆர்என், "சில வருடங்களாவது இந்திய இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்" என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதே நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தன.

    அரசு துறை, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணியாற்ற வேண்டிய கணக்கில், வாரத்திற்கு 40 மணி நேரம் மட்டுமே உழைக்கின்றனர்.

    தனியார் துறையில் அனைத்து நிறுவனங்களிலும் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. அத்துறையில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் பணியாற்றுகின்றனர்.

    மென்பொருள் துறையில் பல வருடங்களுக்கு முன் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்றினால் போதும் எனும் நிலை இருந்தது.

    கொரோனாவிற்கு பின் உலகளவில் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதால் தங்கள் வேலையை காப்பாற்றி கொள்ள ஐடி துறை ஊழியர்கள் 10 அல்லது 11 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

    இப்பின்னணியில் என்ஆர்என் இது குறித்து மீண்டும் பேசியுள்ளார்.

    என்ஆர்என் தெரிவித்திருப்பதாவது:

    தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களும் விவசாயிகளும் கடுமையாக உழைக்கின்றனர். உடல்ரீதியான உழைப்பிற்குத்தான் பெரும்பாலான இந்தியர்கள் செல்கின்றனர்.

    பொருளாதாரத்தை மேலே கொண்டு வர பட்டம் பெற்று அலுவலகங்களில் அமர்ந்து பணியாற்றும் நாம், உடல்ரீதியாக கடினமாக உழைக்கும் மக்களுக்கு கடன் பட்டிருக்கிறோம் என உணர வேண்டும்.

    சமூக வலைதளங்களில் பெரிதும் நான் விமர்சிக்கப்பட்டேன்.

    என்னிடம் இது குறித்து பேச வந்திருந்தால் நான் என்ன தவறாக கூறி விட்டேன் என கேட்டிருப்பேன். அவர்கள் எனது துறை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்பதல்ல; எந்த துறையானாலும் சரி. ஆனால், அவ்வாறு யாரும் வரவில்லை.

    இருந்தாலும் சில நல்ல உள்ளங்களும், அயல்நாட்டில் வாழும் இந்தியர்களும் என் கருத்தை வரவேற்றார்கள்.

    நான் வாரத்திற்கு ஆறரை நாட்கள் உழைத்தவன். காலை 06:00 மணிக்கு கிளம்பி 06:20 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன். மாலை 08:30 மணிக்கு மேல்தான் பணியை முடித்து புறப்படுவேன்.

    நான் செய்து பார்க்காத எதையும் அறிவுரையாக பிறருக்கு கூறும் வழக்கம் எனக்கு கிடையாது.

    இவ்வாறு என்ஆர்என் கூறினார்.

    "என் கணவர் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கும் வழக்கமுள்ளவர்" என அவர் மனைவி, சுதா மூர்த்தி தெரிவித்தார்.

    ஓய்வின்றி உழைப்பதால் ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலை (work-life balance) சீர்குலைந்து விடும் என உளவியல் நிபுணர்களும், மனித வள வல்லுனர்களும் எச்சரிக்கின்றனர்.

    ×