search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nrc release"

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    கொல்கத்தா:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்பொது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள். 

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    ×