search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nose break"

    பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ மூக்கை உடையுங்கள் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #GovernorKiranBedi

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, மகளிர் வன மையம் மற்றும் இளைஞர், குழந்தைகள் தலைமைத்துவ மையம் ஆகியவற்றின் சார்பில் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சி பட்டறை தொடக்க விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் சுந்தர வடிவேலு முன்னிலை வகித்தார். தற்காப்பு பயிற்சி பட்டறையை கவர்னர் கிரண்பேடி தொடங்கி வைத்து அது தொடர்பான பிரசுரத்தை வெளியிட்டு பேசினார்.

    திருமணத்துக்கு வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். யாராவது வரதட்சணை கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் பிறகு அவர்களாவே வரதட்சணையின்றி திருமணம் செய்து கொள்ள இறங்கி வருவார்கள்.

    திருமணத்தின் போது உங்களது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை பெற்றோர் டெபாசிட் செலுத்தினால் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதனை யாராவது கேட்டால் எடுத்து கொடுக்கக் கூடாது.

    எப்போதும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது உங்களை சுறு சுறுப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும், எதை பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை துணிச்சலுடன் பேசுங்கள். அச்சத்துடன் இருக்காதீர்கள்.

    பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையை தராது. என்னால் தலைமையேற்க முடியும் என்று கூறி முன்வர வேண்டும். அப்போது தான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாக பயணம் செய்ய வேண்டும். பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது யாராவது பின் தொடர்ந்தாலோ, கேலி கிண்டல் செய்தாலோ எட்டி உதையுங்கள், மூக்கை உடையுங்கள், பிறகு அவர்கள் உங்கள் பக்கம் வரவே மாட்டார்கள்.

    பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அது போல் தைரியமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை உருவாக வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி பேசினார்.

    பயிற்சி பெற 50 மாணவிகள் வந்திருந்தனர். அவர்களிடம் கவர்னர் கிரண்பேடி உங்களில் எத்தனை பேரை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலான மாணவிகள் கையை உயர்த்தினர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி இளைஞர்கள் தொல்லை தருகிறார்கள் என்று நீங்கள் வழியை மாற்றினால், அவர்கள் வேறொரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பார்கள். நீங்கள் மன தையரியத்துடன் செயல்பட்டால் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்யும் பழக்கத்தை விட்டு விடுவார்கள் என்று குறிப்பிட்டார்.

    அதன் பின்னர் கேலி செய்யும் இளைஞர்களை எப்படி தாக்குவது என்று கவர்னர் கிரண்பேடி செயல் விளக்கம் அளித்தார். #GovernorKiranBedi

    ×