என் மலர்
நீங்கள் தேடியது "No deposit will be purchased"
- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
- அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேன்மொழி எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜனதா விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இதனால் வெற்றிநடை போட்டு வருகிறோம். இத்தனை நாட்கள் காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது போல் இருந்தது. நமது வெற்றி இலக்குக்கு இடையூறாக இருந்த பா.ஜனதா நீக்கப்பட்டு விட்டது. இதனால் அ.தி.மு.க. வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 2 ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுகிறார். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து தற்போது நம்மையும் கடத்து விட்டார். கூட்டணியில் இருந்து கொண்டே ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மத்தை மீறியுள்ளார். அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றிய பிறகாவது அவர் திருந்துவார் என்றால் இல்லை, மேலும் தனது பெயரிலேயே அண்ணாவை வைத்துக் கொண்டு பேரறிஞர் அண்ணாவை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது? என் மண் என் மக்கள் தவறான தலைப்பு. இதை நாம் ஆதரிக்க கூடாது என நான் கூறினேன். கர்நாடகாவில் காக்கிச் சட்டை போட்ட போலீஸ் அண்ணாமலைக்கு எப்படி இந்த மண் சொந்தமாகும். அவர் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். கூட்டணியில் இருந்து கொண்டே நம் தலைவர்களை விமர்சனம் செய்தால் எப்படி பொறுத்துக் கொள்வது? அ.தி.மு.க.வுக்கு என கொள்கை, குறிக்கோள், லட்சியம் உள்ளது. நமது கொள்கையில் அவர்களுக்கு முரண்பாடு உள்ளது. பக்குவம் இல்லாத அரசியல்வாதியாக அண்ணாமலை உள்ளார்.
அரசியல் முதிர்ச்சி இல்லை. தமிழகத்தில் உள்ள பா.ஜனதா கட்சியில் பாதி பேர் ரவுடி, கந்து வட்டிக்காரர்களாக உள்ளனர். மூத்த உறுப்பினர்கள் இவர்களது ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பாரதிய ஜனதாவுக்கு தமிழகத்தில் தனித்து நிற்கும் சக்தி கிடையாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது. அதன் பிறகு அவர்கள் சக்தி என்ன என்று அவர்களே தெரிந்து கொள்வார்கள்.
தி.மு.க. திராவிட கட்சி அல்ல. கருணாநிதி கட்சியாக உள்ளது. கருணாநிதி அதனைத் தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி என குடும்ப கட்சியாக மாறி விட்டது. அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் உள்ளனர். மத்திய அரசுக்கு பயந்து அவரை விமர்சிக்க தி.மு.க.வினர் தயங்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் தவமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சேசுராஜ்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் அண்ணாமலை, சிறுபான்மையினர் மாவட்ட பொறுப்பாளர் சிமியோன் ராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் புரட்சிமணி, எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முனியப்பன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






