search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new storm"

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். #Storm #Rain #BayofBengal
    சென்னை:

    கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கிய பின்பு அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

    நேற்று காலை வரை சாத்தனூர், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ. மழையும், வேலூர் கலவை, கிருஷ்ணகிரியில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    அதன்பிறகு இது தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. வருகிற 10-ந் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறி தமிழகம்-ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    புயல் முதலில் சென்னை நோக்கி நகரும் என்றும், சென்னையை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது காற்று வீசும் திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.



    12-ந் தேதி புயலாக மாறி கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும். 14-ந் தேதி கரையை நெருங்கும். 15-ந் தேதி கடற்கரையை அடையும், 16-ந் தேதி கரையை கடக்காமல் வலுவிழந்து ஒடிசாவுக்கு சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக திங்கட்கிழமைக்கு மேல் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும்பட்சத்தில் அதற்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேய்ட்டி’ என பெயர் சூட்டும். #Storm #Rain #BayofBengal

    அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த பகுதி வலுப்பெற்று புயலாக உருவாகும் என்றும், அது 15-ந்தேதி சென்னையை நெருங்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Storm #Rain #AndamanSea
    சென்னை:

    வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. அது தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் வரை பரவியுள்ளது.

    இந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதன் காரணமாக அந்தமான் நிகோபர் தீவுகளில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே தனியார் வானிலை ஆய்வாளர்களும், சர்வதேச வானிலை அமைப்புகளும் அந்தமான் கடலில் உருவாகும் புயல் சென்னையை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    வருகிற 14-ந்தேதி சென்னை அருகே மையம் கொண்டு இருக்கும். 15-ந் தேதி காலை சென்னையை நெருங்கும். அன்றைய தினம் மாலை புதுவை நோக்கி நகர்ந்து அன்று இரவு அல்லது 16-ந்தேதி காலையில் புதுவை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. கரையை கடந்ததும் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இப்போதைய நிலையில் காற்று வீசும் திசையை வைத்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசை மாறினால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே 13-ந்தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

    அந்தமான் புயலின் தாக்கம் மற்றும் செல்லும் திசை குறித்து இந்திய வானிலை மையமும் கணிந்து வருகிறது. அதன்பின்பு ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. #Storm #Rain #AndamanSea

    ×