search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Record High"

    பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.82.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
    சென்னை:

    தற்போது தங்கத்தைப் போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.

    இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடுசெய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.

    அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது. அதேபோன்று டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது. இந்த விலை உயர்வு பின்னர் சற்று தணிந்தது. ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.



    கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்து ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. #PetrolPrice
    ×