search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEW COLLEGE OPENING"

    • கரூரில் சிஎஸ்ஐ பிஷப் சாலமோன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது
    • சாதி, மதம், இனம் போன்ற எந்த வேறுபாடுகளும் இன்றி கரூர் மாவட்டத்தில் கல்லூரி கல்வி சேவையாற்றும்

    கரூர்:

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சார்பு நிறுவனமாக கரூர் சர்ச் கார்னர் பகுதியில் சிஎஸ்ஐ பிஷப் சாலமோன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் கல்லூரி வளாகத்தை திறந்து வைத்து, கல்லூரியை தொடங்கி வைத்தார்.

    சிஎஸ்ஐ திருச்சி-தஞ்சை மண்டல பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். ஸ்டான்லி மதிச்செல்வன், கரூர் தலைவர் பாஸ்கரன், கரூர் சிஎஸ்ஐ, ஐடிஐ தாளாளர் ஸ்டெர்லிங், கிறிஸ்டோபர், சுரேந்திரகுமார், அலுவலக செயலாளர் சுதர்சன் மற்றும் பல்வேறு சிஎஸ்ஐ சர்ச்சுகளின் தலைவர்கள், முன்னாள், இன்னாள் கல்லூரி, பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள் முன்னிலை வகித்தனர்.

    திருச்சி, தஞ்சை சிஎஸ்ஐ திருமண்டல பேராயர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசியதாவது, சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபை நூற்றுக்கணக்கான உயர்கல்வி நிலையங்கள், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை நடத்தி வருகிறது.

    திருச்சபையின் பவள விழா (75-வது ஆண்டு) கொண்டாட்டத்தின் அங்கமாக கரூரில் ஒரு புதிய கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து, இப்போது கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

    இக்கல்லூரி கல்வி தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிக்கும். சாதி, மதம், இனம் போன்ற எந்த வேறுபாடுகளும் இன்றி கரூர் மாவட்டத்தில் கல்லூரி கல்வி சேவையாற்றும். இக்கல்லூரி தமிழகத்தில் புகழ்பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஒரு சார்பு நிறுவனமாகும்.

    மேலும் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சிஎஸ்ஐ திருச்சபையின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

    கல்லூரி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றினர். அனைத்து சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி குறித்து ராஜாமான்சிங் பேசினார். விழாவில் திருமண்டலத்தின் முன்னாள் செயலாளர் பவுலின் சத்தியமூர்த்தி, கன்ஸ்யூமர் கோர்ட் உறுப்பினர் ஜவகர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால்தயாபரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பேராயர் சாலமன் துரைசாமியின் படத்தை சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபையின் பிரதம் பேராயர் தர்மராஜ் ரசாலம் திறந்து வைத்து பேசியதாவது:

    கரூரில் இக்கல்லூரியை கொண்டு வர முழு முயற்சி எடுத்த திருச்சி தஞ்சை திருமண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் மற்றும் அவருடன் செயல்பட்டவர்களின் முயற்சியை பாராட்டுகிறேன்.

    இக்கல்லூரி மென்மேலும் வளர்ந்து சிறந்த வகையில் இப்பகுதியில் கல்வி சேவையாற்றும் என்றார். சிஎஸ்ஐ சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல் நன்றி கூறினார்.

    விழாவில் தி ஏட்ரியன் சிபிஎஸ்இ பள்ளி தலைவர் ரகுபதி, தாளாளர் ஜேனட் ரகுபதி மற்றும் கரூர், திருச்சி பல மாவட்டங்களில் இருந்து திருச்சபை சார்ந்த மக்கள் கரூர் மாவட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×