search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narasimha avatharam"

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது, வித்தியாசமானது. அந்த அவதாரம் உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது, வித்தியாசமானது. அந்த அவதாரம் உருவான வரலாறு...

    ஆடியாடி யகம் கரைந்து, இசை
    பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
    நாடி நாடி நரசிங்கா வென்று,
    வாடி வாடுமிங் வாணுதலே.
    -நம்மாழ்வார் திருமொழி-

    நாராயணர் வராக அவதாரமெடுத்து தன் சகோதரன் இரண்யாட்சனை கொன்ற செய்தியை கேட்டதும் இரண்யகசிபுக்கு அடங்கா கோபம் வந்தது. மந்தார மலையின் குகையன்றினுள் சென்று அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினான். பல ஆண்டுகள் ஆகாரம், தண்ணீர், நித்திரை இல்லாமல் கடுந்தவம் செய்ததால் உடல் மெலிந்து எலும்புகள் மாத்திரமே தெரிந்த அவனை பிரம்மா அழைத்ததும் தவம் கலைந்து கண் விழித்தான்.

    இரண்யகசிபு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார் முகமலர்ச்சியுடன் பிரம்ம தேவர். இரண்யகசிபு, கரங்களை சிரமேற்குவித்து சொன்னான். இந்த மூவுலகையும் ஆளும் வல்லமை வேண்டும். இரவிலோ, பகலிலோ, தேவனாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. என் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும் என்னை கொல்ல முயற்சிப்பவன் தலை சுக்கு ஆயிரமாக வெடித்து விட வேண்டும். இந்த வரத்தை கொடுத்தாலே போதும்.

    அவனுடைய தவத்திற்கும் தோத்திரத்திற்கும் மயங்கிய பிரம்ம தேவர், அவன் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு மறைந்தார். இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் பிரம்மா காட்சியளித்த இடத்தை வணங்கி குகையிலிருந்து தன் ஊருக்கு புறப்பட்டான். இரண்யகசிபு தவம் முடிந்து ஊர் திரும்பும் சமயம் அவன் மனைவி கயாது அழகிய மகனை பெற்றெடுத்திருந்தாள். இரண்யகசிபு நகரம் திரும்பியதை அறிந்த நாரத முனிவர் கயாதுவையும் அவள் குழந்தையையும் அழைத்து வந்து அவனிடம் ஒப்படைத்தார்.

    குழந்தைக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக அவர்கள் வளர்க்க தொடங்கினார்கள். இரண்யகசிபு பிரம்ம தேவர் அளித்த வரத்தின் பலத்தால் மூன்று உலகங்களையும் அவன் விருப்பம் போல ஆட்டிப்படைத்தான். அவன் விரும்பியதை மட்டுமே தேவரோ முனிவரோ செய்ய வேண்டும். மரம் செடி கொடிகள் கூட அவன் விருப்பத்திற்கு மாறாக பூக்கவோ, காய்க்கவோ கூடாது. அவன் சொல்படி தான் சூரியன், சந்திரன், வருணன், வாயு ஆகியோர் செயல்பட வேண்டும். கடைசியாக அவன் சகோதரனை கொன்ற நாராயணன் பெயரை ஒருவரும் சொல்லக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவனையே பூஜிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

    தேவர்களும், முனிவர்களும் அல்லல்பட்டனர். மூவுலகமும் இரண்யகசிபுவுக்கு நடுங்கிக் கொண்டிருந்தன. இரண்யகசிபு இரவும் பகலும் அவனுடைய விரோதியான நாராயணனை கொல்லும் எண்ணத்துடனேயே இருந்தான். பிரகலாதனுக்கு தக்க வயது வந்ததும் குலகுரு சுக்கிராச்சாரியாரின் பிள்ளைகள் இருவரிடம் குருகுல வாசத்திற்கு ஒப்படைத்தான் இரண்யகசிபு. மகன் பிரகலாதனுக்கு சகல கல்விகளையும் அரக்கர்களின் நீதிமுறைகளையும் போதிக்கும்படி உரைத்தான்.

    சுக்கிராச்சாரியாரின் புதல்வர்களான சண்டன், அமர்க்கன் இருவரும் பிரகலாதனை அழைத்துகொண்டு சென்றனர். மற்ற அரக்க குழந்தைகளுடன் அவனுக்கும் கல்வி போதிக்க தொடங்கினர். சில மாதங்களுக்கு பிறகு இரண்யகசிபு மகன் பிரகலாதனை அழைத்து வரச்சொன்னான். சுக்கிராச்சாரியாரின் பிள்ளைகள் பிரகலாதனை அழைத்து வந்தார்கள். மகனை கண்டதும் இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான். அவனுக்கு தின்பண்டங்கள் கொடுத்தான். பிறகு அவன் குருவிடம் கற்றவற்றில் சிலவற்றை கூறும்படி கேட்டான்.

    பிரகலாதன் பணிவுடன் சொன்னான். நான் என்ற கர்வம் இருக்கக்கூடாது. என்னுடையது என்று எதையும் உரிமை கொண்டாடுவது கூடாது. உலக வாழ்க்கையே மாயை. பந்தம் பாசம் அனைத்தையும் மனதிலிருந்து அகற்றி ஸ்ரீமந் நாராயணனை இடைவிடாது தியானம் செய்வதே சிறந்ததாகும் என்றான். இரண்யகசிபுவுக்கு கோபம் வந்தது. அவனுடைய கொடிய எதிரியின் பெயரை மகனே புகழ்ந்து பேசியது அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. மகனுடைய மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள் என்று எண்ணினான். குருவின் பிள்ளைகளிடம் பிரகலாதனை ஒப்படைத்து அவன் மனதை மாற்றி நல்ல வழிக்கு கொண்டு வரும்படி சொல்லி அனுப்பினான்.

    குடிலுக்கு சென்றதும் அவர்கள் பிரகலாதனிடம் குழந்தாய் நாங்கள் போதித்தவற்றை மறந்து ஏதேதோ உன் தந்தையிடம் சொன்னாயே, அவற்றை யார் உனக்குப் போதித்தது? உண்மையைச் சொல்லு. பிரகலாதன் சிறிதும் தயங்காமல் பதிலுரைத்தான். குருதேவர்களே நான் உண்மையைத்தான் தந்தையிடம் சொன்னேன். அகிலத்தையும் படைத்து காத்து அழிக்கும் பரந்தாமனை துதிப்பவர்களுக்கு பேத உணர்ச்சியே ஏற்படாது, நான் எனது என்ற அகங்காரம் உண்டாகாது. தேவதேவனான நாராயணனை வணங்குபவர்களுக்கு பிறவித்துன்பமே இருக்காது.

    சண்டன் அமர்க்கன் இருவருக்கும் ஆத்திரம் வந்தது. அரசனின் மகன் என்பதையும் மறந்து பிரம்பை எடுத்து நன்றாக அடித்தார்கள். கெட்ட புத்தியுள்ளவனே, நாங்கள் சொல்வது போல் நடக்காவிட்டால் உன்னை சித்ரவதை செய்வோம். உனக்கு உணவும் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். பிரம்பால் அடித்தபோதும் பிரகலாதன் பரந்தாமனின் நாமங்ளை உச்சரித்து கொண்டே இருந்தான். அவனுக்கு பிரம்படிகள் தூசு தட்டுவது போல் இருந்தது. நாள்தோறும் ஆச்சாரியர்கள் இருவரும் பிரகலாதனை திருத்தப் பல வழிகளை கையாண்டார்கள். அடித்து துன்புறுத்தினார்கள். உணவு கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். நயமாகச் சொன்னார்கள். கடைசியாக அவர்கள் சொல்லிக் கொடுப்பதை தந்தையிடம் கூறும்படி வேண்டிக்கொண்டார்கள்.

    பிரகலாதனை அழைத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்றனர். மகனை கண்ட இரண்யகசிபு மகிழ்ச்சியுடன் அவனை அருகில் அழைத்து அமரச் சொன்னான். அவன் கற்றதை கூறச் சொன்னான்.தந்தையை வணங்கி சொன்னான் பிரகலாதன். நாராயணனுடைய கலியாண குணங்களை கேட்பதும், சொல்லுவதும் அவரை துதிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை கொடுக்கும் என்றான்.

    இரண்யகசிபுவுக்கு வந்த கோபத்தில் மகனை தூக்கிக் கீழே போட்டான். கொலையாளிகளை அழைத்து இவனை மலை உச்சிக்கு எடுத்து சென்று உருட்டி விடுங்கள் என்றான். கொலையாளிகள் பிரகலாதனை உயரமான மலை மீது தூக்கி சென்றார்கள். உச்சியிலிருந்து அவனை உருட்டி விட்டார்கள். பிரகலாதன் சிறிதும் அச்சமின்றி கரங்குவித்து நாராயணனை தியானித்து கொண்டிருந்தான். மலையடிவாரத்தை அவன் ஒரு சிறு காயமுமின்றி வந்தடைந்தான்.

    இதை கண்டு கொலையாளிகள் பயந்து அவனை தூக்கிக்கொண்டு அரண்மனைக்கு சென்றார்கள். நடந்ததை இரண்யகசிபுவிடம் கூறினார்கள். ஆத்திரம் அடங்காத இரண்யகசிபு மகன் என்றும் பாராமல் கொடிய நாகத்தை விட்டு கடிக்க சொன்னான். பாம்பு பிடாரன் கொடிய நாகத்தை எடுத்து வந்து பிரகலாதன் முன் விட்டான். சீறிக்கொண்டு வந்த நாகத்தை பிரகலாதன் அச்சமின்றி கரங்குவித்து வணங்கி ஓம் நமோ நாராயணா என்று சொல்லிக் கொண்டிருந்தான். சீறி வந்த நாகம் அவனை மும்முறை வலம் வந்தது. அவனுடைய பாதத்தில் தலை வைத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தது.

    இதை கண்டதும் இரண்யகசிபுவின் கோபம் பன்மடங்காக அதிகரித்தது. முரட்டு யானையை அழைத்து வர கட்டளையிட்டான். அரண்மனையின் முன்னாலேயே பிரகலாதனை நிற்க சொன்னான். யானையை விட்டு காலால் மிதிக்க செய்யும்படி உத்திரவிட்டான். யானைப்பாகன் யானையை தூண்டினான். யானையும் கோபாவேசத்துடன் பிரகலாதனை நோக்கி வந்தது.

    பிரகலாதன் இரு கரங்குவித்து ஓம் நமோ நாராயணா என்று சொன்னான். கோபாவேசத்துடன் வந்த யானை பிரகலாதன் முன் மண்டியிட்டு துதிக்கையால் அவனை வணங்கி எழுந்து அங்கிருந்து சென்றது. இரண்யகசிபுவின் கோபம் அடங்கவில்லை. மனைவியை அழைத்தான். ஒரு கோப்பை நிறைய கொடிய நஞ்சு எடுத்து வரும்படி ஆட்களுக்கு கட்டளையிட்டான். நஞ்சு நிறைந்த கோப்பையை மனைவியிடம் கொடுத்தான். மகனுக்கு பருகத்தரும்படி ஆணையிட்டான்.

    கயாது கண் கலங்கி நஞ்சு நிறைந்த கோப்பையை கையில் வைத்துக்கொண்டு தயங்கி நின்றாள். தாயின் வேதனையை கண்ட பிரகலாதன் அவளிடமிருந்து கோப்பையை பெற்றான். நாராயணன் நாமத்தை உச்சரித்த வண்ணம் பருகினான். கொடிய நஞ்சும் அவனை ஒன்றும் செய்யாதது கண்டும் இரண்யகசிபு மனம் மாறவில்லை. அவன் கோபத்துடன் உரத்த குரலில், ஏ மூடனே, மூவுலகத்திலும் என் பெயரை சொன்னாலே நடுங்குகிறார்கள். நீயோ சிறிதும் அச்சமின்றி ஏதேதோ பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு துணிவு எப்படி யாரால் ஏற்பட்டது? என்று கேட்டான்.

    பிரகலாதன் தந்தையை வணங்கி கரம் குவித்து நாராயணனை மனதில் நினைத்து தந்தையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் பரந்தாமனின் திருநாமமே காரணமாகும் என்றான். என்னடா பிதற்றுகிறாய்? மூவுலகத்திலும் என்னை காட்டிலும் மேலானவன் இருக்கிறானா? அவன் யார்? எங்கு இருக்கிறான்? என்று ஆத்திரமாக கேட்டான் இரண்யகசிபு.

    தந்தையே அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். ஏன் நாவிலும் இருப்பார். உங்களுடைய சொல்லிலும் இருப்பார் என்று அமைதியாக கூறினான்.

    இரண்யகசிபு மிக்க கோபத்துடன் என்னடா உளறுகிறாய். இந்த தூணிலும் இருப்பாரா? எங்கே காட்டு என்று கையில் வாளுடன் தூணை நோக்கி ஓடினான். தூணை வாளால் வெட்டினான். மறுகணம் தூண் இரண்டாக பிளந்தது. பயங்கர தோற்றத்துடன் நரசிம்மர் தோன்றினார்.

    விலங்காகவும் இல்லை. மனிதனாகவும் இல்லை. தலை சிங்கமாகவும், உடல் மனிதனாகவும் இருந்த உருவத்தை பார்த்ததும் விசித்திரமான உருவமாக இருக்கிறதே என்று இரண்யகசிபு மலைத்து நின்றான். நரசிம்மரின் கண்கள் மின்னின. பிடரிமயிர்கள் குலுங்க அவர் தலையை அசைத்து கர்ஜித்தார். அவருடைய வாயில் கோரைப்பற்கள் கூர்மையாக காணப்பட்டன.

    கைகளில் நீண்ட கூர்மையான நகங்களும், மார்பும் கை கால்களும் பலம் வாய்ந்ததாக இருந்தன. நரசிம்மரை வெட்ட இரண்யகசிபு வாளை ஓங்கி வீசினான். நரசிம்மர் அதைத் தட்டிவிட்டார். அவனுடைய கையை பற்றினார். இருவரும் கட்டிப்பிடித்து மல்யுத்தம் செய்தார்கள். பகவான் விளையாட்டாக அவனுடன் போர் புரிந்தார். மாலை மங்கும் வரை அவர் காலங்கடத்தினார்.

    அந்தி சந்திக்கும் வேளையில் இரண்யகசிபுவை பற்றி இழுத்து தூக்கிக்கொண்டு வாயில் நிலைப்படிக்கு வந்தார். இரண்யகசிபு விடுவித்துக்கொள்ள பெருமுயற்சி செய்தான். நரசிம்மர் பிடியை விடாமல் தமது நகங்களால் அவன் உடலை கிழித்தார். இரண்யகசிபு மடிந்ததை கண்டு தேவர்கள் மலர் மாரிப் பொழிந்தார்கள்.
    பிரகலாதன் கரங்குவித்து நரசிம்மரை துதித்தான். நரசிம்மர் மகிழ்ச்சியடைந்து பிரகலாதனை வாழ்த்தி குழந்தாய் உன் பக்தி என்னை பரவசப்படுத்தியது. உனக்கு என்ன வரம் வேண்டும் சொல் என்று கேட்டார்.

    பிரகலாதன் அவரை வலம் வந்து பாதங்களில் வணங்கி எழுந்து நின்று, பரந்தாமனே பந்த பாசங்கள், ஆசைகள், மோகம் ஆகிய படுகுழிகளில் விழாமல் தங்கள் திருவடிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் என் விருப்பம் என்றான்.

    பிரகலாதா, என்னிடம் பக்தி பூண்டவர்கள் பற்றற்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை ஆசாபாசங்கள் எதுவும் பிடிக்காது. நீ இந்த பூலோகத்தை ஆண்டு கடைசியில் என்னை வந்து சேர் என்றார் நரசிம்மர். பிரம்மா முதலிய தேவர்கள் துதிக்க நரசிம்மர் மறைந்தார். பிறகு பிரகலாதன் தந்தையின் ஈமச் சடங்குகளை செய்தான். பெரியோர்கள் பிரகலாதனுக்கு முடி சூட்டினார்கள். அவனும் நீதி தவறாமல் உலகத்தை ஆண்டு வந்தான்.
    ×