search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Ahmedabad"

    மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    மும்பை:

    ஜப்பான், சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளில் அதிக வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது.

    அதே போல இந்தியாவிலும் புல்லட் ரெயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி முற்சிகள் மேற்கொண்டார். ஜப்பான் அரசு உதவியுடன் புல்லட் ரெயில் திட்டத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் இருந்து குஜராத் தலைநகரம் அகமதாபாத்துக்கு ரெயில் இயக்க திட்டம் உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்து. இதில் பெருமளவு பணத்தை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு கடனாக வழங்குகிறது.

    புல்லட் ரெயிலுக்காக தனிப்பாதை அமைக்கப்படுகிறது. மும்பை-அகமதாபாத் இடையே பாதை அமைய உள்ள மொத்த தூரம் 508 கிலோ மீட்டர். அதில் குஜராத் மாநிலத்தில் 350 கிலோ மீட்டரும், மராட்டிய மாநிலத்தில் 155 கிலோ மீட்டரும், தத்ரா நாகர் காவேலி யூனியன் பிரதேசத்தில் 2 கிலோ மீட்டரும் அடங்கும்.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய அதிவேக ரெயில்வே துறை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த ஹவாசாகி ஜியாலஜிக்கல் என்ஜினீயரிங் நிறுவனமும் இணைந்து திட்ட கட்டுமான பணிகளை செய்கின்றன.

    இதற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 7 ஆயிரம் விவசாயிகள் உள்பட 60 ஆயிரம் பேருடைய நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நில ஆர்ஜிதம் தாமதம் ஆகிறது. இது வரை 2¼ ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக மும்பையில் நிலம் எடுப்பதில் பெரிய சவாலாக உள்ளது. மும்பை நிலத்தின் மதிப்பு மிக அதிகம். எனவே யாரும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

    விக்ரோலியில் கோத்ரேஜ் நிறுவனத்திற்கு சொந்தமான 8½ ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு மிக மிக அதிகம். இந்த நிலம் மட்டுமே ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புடையது என்று கோத்ரேஜ் நிறுவனம் கூறுகிறது.

    எனவே அந்த நிறுவனம் நிலத்தை விட்டு கொடுக்க மறுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மாற்றுப் பாதையில் ரெயில் திட்டத்தை நிறைவேற்றும்படி வலியுறுத்தி வருகிறது.

    அதே போல மராட்டியம், குஜராத் மாநிலங்களில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, மராட்டிய நவநிர்மான் சேனா போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    புல்லட் ரெயில் திட்டத்தை 2022-ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் நிலம் எடுப்பதற்கே பெரும் சிக்கலாக இருப்பதால் திட்டத்தை முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. பாந்த்ரா குர்லா பகுதியில் சுரங்கம் தோண்டி ரெயில்வே நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ரெயில் மும்பையில் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் வழியாக செல்கிறது. அந்த பணிகளும் முடங்கி இருக்கின்றன.

    ஆனால் மேல் நிலப் பரப்பில் அமைக்க வேண்டிய எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் 2018 டிசம்பருக்குள் நில ஆர்ஜிதத்தை முடிக்க வேண்டும் என்று 2019 ஜனவரியில் கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    ×