search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "modi prises"

    நாட்டுப்பற்றை தட்டியெழுப்பியவர் சர்தார் வல்லபாய் படேல் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #SardalPatel #PMModi #Inaugurate
    புதுடெல்லி:

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வரலாற்றில் 1947-ம் ஆண்டு முதல்பாதி மிகவும் முக்கியமான காலகட்டமாகும். நாட்டில் காலணி ஆட்சி முடிவுக்கு வருவதும், இந்திய பிரிவினை உறுதியானதுமான தருணம். ஆனால், நாடு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவினையை எதிர்கொள்ளுமா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நேரம். விலைவாசிகள் அதிகரித்ததோடு, உணவு பற்றாக்குறையும் நாட்டில் சாதாரணமாக காணப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக இந்தியாவின் ஒருமைப்பாடு மிகவும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியிருந்தது.



    இதுபோன்ற சூழ்நிலையில் 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணங்கள் இணைப்புத் துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் முக்கிய நோக்கம் பரப்பளவு, மக்கள்தொகை, புவி அமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகவும் வேறுபட்டிருந்த நாட்டிலுள்ள 550-க்கும் அதிகமான சுதேச மாகாணங்களோடு பேச்சுகள் நடத்தி, அதற்கு உத்வேகம் அளித்து, மாகாணங்களோடு இந்தியாவின் உறவை பராமரிப்பதாகும்.



    இந்த சூழ்நிலையில், மகாத்மாகாந்தி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். மாநிலங்களின் பிரச்சினைகள் மிகவும் கடினமானது, அதை நீ மட்டுமே தீர்க்க முடியும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். மகாத்மா காந்தி நீ என்று குறிப்பிட்டிருந்தது வேறு யாருமல்ல, சர்தார் வல்லபாய் படேல்தான் அவர். அவருடைய பிறந்தநாளைதான் நாம் இன்று கொண்டாடுகிறோம். அவருக்குத்தான் நாம் இன்று புகழஞ்சலி செலுத்துகிறோம்.

    24 மணி நேரமும் ஓய்வின்றி சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்ட அயராத முயற்சியினால்தான், இன்று நம்மிடம் உள்ள இந்தியாவின் வரைபடம் உருவானது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நாம் புதிய விடியலை கொண்டாடிய வேளையில், தேசத்தை நிர்மாணிக்கும் பணி முற்றுப்பெறாமலே இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி, நாட்டின் அன்றாட நிர்வாகம் தொடர்பான விஷயங்கள், நாட்டு மக்களின் நலன்களை பாதுகாப்பது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர, ஒதுக்கப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்டவற்றுக்கு தேவையான நிர்வாக பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

    சர்தார் வல்லபாய் படேலிடம் இருந்த ஒரே மாதிரியான 2 பண்புகள் நம்பிக்கை மற்றும் நேர்மையாகும். நாட்டிலுள்ள விவசாயிகள் அவர் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர், ஒரு விவசாயியின் மகன் மட்டுமல்ல, பர்தோலி சத்யாகிரகத்தை முன்நின்று நடத்தியவர். உழைக்கும் வர்க்கத்தினர் சர்தார் வல்லபாய் படேலை நம்பிக்கை நட்சத்திரமாகவே பார்த்தனர் என்பதோடு, உழைக்கும் வர்க்கத்திற்காக பேசும் ஒரு தலைவராகவும் திகழ்ந்தார். வர்த்தகர்களும், தொழில் அதிபர்களும் சர்தார் படேலோடு பணிபுரிவதை விரும்பினார்கள். ஏனென்றால், இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தலைவராக அவர் இருக்கிறார் என்பதை உணர்ந்ததால், படேலை அவர்கள் விரும்பினார்கள்.

    சர்தார் வல்லபாய் படேலின் சக அரசியல் தலைவர்களும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் படேலின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். நாடு முழுவதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.

    இந்த ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் மிகவும் சிறப்பானது. 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளோடு, ஒற்றுமை சிலை இன்று திறந்துவைக்கப்படுகிறது. நர்மதை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒற்றுமை சிலை உலகில் உள்ள மிக உயர்ந்த சிலையாகும். பூமித்தாயின் மகன் சர்தார் வல்லபாய் படேல் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து நின்று நமக்கு வழிகாட்டுவதோடு, நமக்கு ஊக்கமளிப்பார் என்பதில் ஐயமில்லை.

    சர்தார் வல்லபாய் படேலின் இந்த மாபெரும் சிலை அமைக்கப்படுவதை உறுதிசெய்ய இரவு-பகல் பாராது உழைத்த அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த உயர்ந்த நோக்கத்துடன் கூடிய திட்டத்தை செயல்படுத்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி நாங்கள் அடிக்கல் நாட்டியது நோக்கி எனது சிந்தனை செல்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இதுபோன்ற ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைபட வைத்திருக்கிறது. வரும் காலத்தில் அனைவரும் இந்த ஒற்றுமை சிலையை பார்த்துச் செல்ல வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

    இந்த ஒற்றுமை சிலை, இதயங்களின் ஒற்றுமை மற்றும் நமது தாய் நாட்டின் புவியியல் ஒருங்கிணைப்பின் அடையாளமாக இருக்கும். பிரிந்திருந்தால் நாம் ஒருவரையொருவர் எதிர்கொள்ள முடியாது என்பதை இந்த சிலை வலியுறுத்துகிறது. இணைந்தால், இந்த உலகத்தையே நாம் எதிர்கொள்ளலாம். அதேவேளையில், வளர்ச்சி மற்றும் புகழேணியின் உச்சத்தையும் தொடலாம்.

    ஏகாதிபத்தியத்தை உடைத்தெறிய சர்தார் வல்லபாய் படேல், ஆச்சரியப்படக்கூடிய வேகத்தில் பணியாற்றியதோடு, நாட்டின் புவி பரப்பை ஒற்றுமைப்படுத்தி, நாட்டுப்பற்றை தட்டியெழுப்பியவர். இந்தியா சிறு துண்டுகளாக பிரிந்து போவதை தடுத்ததோடு, நாட்டின் கட்டமைப்போடு சிறிய பகுதிகளைக் கூட ஒருங்கிணைத்தவர். இன்று நாம் இந்த 130 கோடி இந்தியர்கள் தோளோடு தோள் நின்று புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பணி மிகவும் வலுவானது, வளமானது மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், என்ன விரும்பியிருப்பாரோ, அதை நிறைவேற்றும் வகையில் நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் ஊழல் அல்லது பாரபட்சமின்றி உரிய நபருக்கு சென்று சேருவதை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SardalPatel #PMModi #Inaugurate
    ×