search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missing the river"

    • குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
    • உழவர் சந்தைகளுக்கு செல்லும் அரசு பஸ்களை முறையாக இயக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் காட்டெருமை காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்த வனத்துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் இறங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அறிக்கை தயார் செய்து வருகிறோம். விரைவில் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும். மேலும் வன விலங்குகள் வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    ஆற்றை காணவில்லை

    தொடர்ந்து பேசிய விவசாயிகள் விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் வழங்கப்படும் விதைகள் தரமானதாக இல்லை. அவற்றை வாங்கிப் பயிரிட்டதன் மூலம் இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேளாண் துறைகள் விற்பனை செய்யப்படும் விதை தரத்தை ஆய்வு செய்து பிறகு வழங்க வேண்டும்.

    மேல்அரசம்பட்டில் உள்ள ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 77 மீட்டர் அகலம் கொண்ட அந்த ஆற்றில் மேல்அரசம்பட்டிலிருந்து ஒடுகத்தூர் வரை வெறும் 5 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள ஆற்றை காணவில்லை. அதனை மீட்டெடுத்து ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒடுகத்தூரிலிருந்து குடியாத்தம் உழவர் சந்தைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓடவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும்.

    பேரணாம்பட்டு பகுதியில் வனப்பகுதியில் இருந்து தற்போது விலங்குகள் வெளியே வர தொடங்கி விட்டன. கடந்த வாரம் மான் ஒன்று குட்டியுடன் வந்து விவசாய கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

    இதை தடுக்க தனது சொந்த செலவில் காட்டிற்குள் தொட்டி ஒன்று கட்டி வருவதாக விவசாயி ஒருவர் கூறினார். மேலும் இந்த தொட்டியை முழுமையாக கட்டி முடிக்க மணல் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்.அதற்கான மொத்த செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

    ×