search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing persons details"

    இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் போனதாக கூறப்படும் 280 பேரின் விவரங்களை சமர்பிக்குமாறு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது. #SrilankaWar

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

    இவர்களில் பலர் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் சீர்திருத்த முகாம்களில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறி வருகிறது.

    இவர்களை தவிர மேலும் சில ஆயிரம் பேர் மாயமானதாக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன. இலங்கையில் உள்நாட்டுப்போர் தொடங்கிய 30 ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் பேர் இவ்வகையில் காணாமல் போனதாக தெரிகிறது.

    இந்நிலையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் நிலை என்னவானது? அவர்களை உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின்மீது இரண்டாவது முறையாக கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் எம்.எஸ்.எம். சம்சுதீன், உச்சகட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு தாக்கல் செய்ய இலங்கை ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

    இம்மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சரணடைந்த விடுதலைப் புலிகள் என்றொரு பெயர் பட்டியலை இலங்கை ராணுவம் அளித்திருந்தது. அந்தப் பட்டியலில் சீர்திருத்த முகாம்களில் பயிற்சி பெற்ற தமிழர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.



    காணாமல் போனதாக குடும்பத்தினரால் தேடப்படும் நபர்களின் பெயர் விபரங்கள் அந்தப் பட்டியலில் இல்லாமல் போனதால், ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களின் பட்டியலை கோர்ட் கேட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், “காணாமல் போக்கடிக்கப்பட்ட” தங்களது உறவுகள் தொடர்பாக தமிழர்கள் புகார் அளிக்க வசதியாக கொழும்பு நகரில் சிறப்பு அலுவலகம் எனப்படும் உண்மையை கண்டறியும் புலனாய்வு முகமை Office of the Missing Persons (OMP) ஒன்று திறக்கப்பட்டது. 

    இந்நிலையில், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் என்னும் அமைப்பு கடந்த மாதம், போரின்போது காணாமல் போன 280 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் 29 குழந்தைகளும் அடங்குவர். இதுவே இலங்கையில் ஒரே நேரத்தில் ஒரே இடத்திலிருந்து காணமல் போனதாக கூறப்படும் மிகப்பெரிய குழுவாகும். 

    இந்த எண்ணிக்கை பின்னர் 351 ஆக அதிகரித்தது. இவர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

    இதையடுத்து, காணாமல் போனதாக அந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களின் தகவல்களை அளிக்குமாறு அந்த அமைப்பிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    ×