search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marion Biotech"

    • மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது.
    • இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்தை எடுத்து கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. அந்த மருந்தில் எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

    இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மரியான் பயோடெக் நிறுவனத்தின் டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் ஆகிய இரண்டு இருமல் மருந்துகளையும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வு குழு பரிசோதித்தது. இதில் இரண்டு இருமல் மருந்துகளிலும் அளவுக்கு அதிகமான எத்திலீன் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை தரமற்றது என்று அறிவித்துள்ளது. எனவே இந்த இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளை கேட்டுக்கெண்டுள்ளது. ஏற்கனவே மரியான் பயோடெக் நிறுவனத்தின் அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருமல் மருந்து மாதிரிகள் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், அதை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உத்தரவின்படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

    மேலும் மரியன் பயோடெக் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியானது தொடர்பாக உஸ்பெகிஸ்தான், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக முறையிடவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், இந்திய தூதரகம், உஸ்பெகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டுள்ளதாகவும், விசாரணை தொடர்பான கூடுதல் விவரங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்திய மருந்து நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் மீது உஸ்பெகிஸ்தான் அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த பிரதிநிதிகளுக்கு தூதரக உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

    ×