search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia King"

    மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றார். #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    கோலாலம்பூர்:

    மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த 6-ம் தேதி பதவி விலகினார். ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை.

    இஸ்லாமிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் உள்ள மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர். இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர்.



    அவ்வகையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, பஹாங் மாநிலத்தின் தலைவரான சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா (வயது 59), கடந்த 24-ம் தேதி புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டின் 16வது மன்னர் ஆவார்.

    இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் புதிய மன்னர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது நாட்டின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் பெரேக் மாநில தலைவரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் மகாதீர் முகமது மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, உலக கால்பந்து அமைப்பான பிபா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Malaysiaking #Malaysiakingabdicates #SultanAbdullah
    ரஷியா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். #Malaysiaking #Malaysiakingabdicates #Malaysiapalace
    கோலாலம்பூர்:

    தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. 

    அந்நாட்டின் பதினைந்தாம் மன்னராக பொறுப்பு வகிக்கும்  சுல்தான் முஹம்மது(49) தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் பின் முகம்மது, துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் அந்நாட்டின் ஆட்சியை நடத்தி, நிர்வகித்து வருகின்றனர்.

    மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என்று அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.

    உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷியாவை சேர்ந்த முன்னாள் ‘மாஸ்கோ அழகி’ பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

    ஆனால், இந்த வதந்திகள் தொடர்பாக மன்னரின் அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையில், மலேசியாவில் உள்ள இஸ்லாமிய மத தலைவர்கள் சமீபத்தில் ஒன்றுகூடி மன்னரைப்பற்றி வெளியான தகவல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததாக மலேசியா நாட்டு மன்னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவரது பதவி விலகலுக்கான காரணம் தொடர்பாக அந்த அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

    ‘மாஸ்கோ அழகி’ தொடர்பாக முன்னர் வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ராஜினாமா அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    பல்லாயிரம் ஆண்டுகாலமாக இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்துவரும் மலேசியாவில் 9 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களை சேர்ந்த ஆட்சியாளர்கள் சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Malaysiaking #Malaysiakingabdicates #Malaysiapalace  
    ×