search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maariamman"

    • கோவிலுக்கு வந்தாலே உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும்.
    • எதிர்ப்புகள் நீங்கும், பகைகள் தேயும், எல்லா நலனும் பெருகும்.

    மகா சக்தி ஒன்று தான். அந்த சக்தியானது பல்வேறு ரூபங்களில் தோன்றி தன்னை வழிபடும் மக்களுக்கு அருள் புரிந்து வருகின்றது.

    கிராமங்களில் `மாரியம்மன்' என்ற பெயருடனேயே அன்னையை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பெரும்பாலும், இந்த கோவில்கள் வடகிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் திசைகளில் ஏதாவது ஒன்றில் ஊரை சுற்றி அமைந்திருக்கும்.

    பொதுவாக, அம்மனை `கோபக்காரி' என்றே மக்களில் பலரும் நினைத்து வந்தனர். அவள் கோபத்தால்தான் வெப்பம் மிகுதியாகின்றது. வெப்பு நோய்களான அம்மை, போன்றவை ஏற்படுகின்றன குடும்பங்களில், தொல்லைகள் ஏற்படுகின்றன என்றும் நினைத்தார்கள்.

    அந்த கோபத்தைத் தணிக்கவே, சாந்தப்படுத்தவே ஆண்டுதோறும் தவறாமல் அம்மனுக்கு குறிப்பிட்ட மாதங்களில் வழிபாடுகளை சிறப்பாக செய்து வந்தனர்.

    காலங்களை கடந்து நிற்கும் ஆதிபராபரையாகிய மூல சக்தியே, இக்கோவிலில் முண்டகக் கண்ணி அம்மனாகத் தோன்றி அருள்புரிந்து வருகின்றாள்.

    சப்த கன்னியருள் இவளும் ஒருத்தி என்று, சிலர் சொல்லுகின்றனர். சிலர் சென்னையை சுற்றியுள்ள காவல் தெய்வங்களுள் இவளும் ஒருத்தி என்கின்றனர். `இவள் சாந்த மூர்த்தியாக விளங்குபவள்'என்கின்றனர்.

    பலர் படவேட்டம்மன் என்னும் புகழ்பெற்ற ரேணுகாதேவி தான் இவள் என்கின்றனர். சிலர் கிராமத்தேவதைகளாக விளங்கும் அறுபத்துமூவரில் ஒருத்தி இவள் என்கின்றனர். சிலர் யோகினியருள் ஒருத்தி என்கின்றனர்.

    இந்த அன்னையை பற்றிப் பல செவி வழி கதைகள் நாட்டில் வழங்குகின்றன. இவள் புகழும் அருளும் சக்தியும் ஒவ்வொருவரையும் பலவாறு நினைக்க வைக்கின்றன. சொல்லும் பொருளுமாக விளங்கும் அன்னையோ, இவற்றை எல்லாம் கடந்து மூலமுதல்வியாக விளங்கிக் காட்சி தந்து கருணை பாலித்து வருகின்றாள்.

    தொண்டை நாட்டிலும், நடு நாட்டிலும் அம்மன் கோவில்களில் அன்னையின் தலையை மட்டும் உருவமைத்து வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. பரசுராமனால் வெட்டுப்பட்ட அவரின் அன்னையான ரேணுகாவின் தலை அது என்று மக்கள் சொல்கின்றனர்.

    ரேணுகா பரமேஸ்வரி தான் எங்கும் அம்மனாக தோன்றிப் பல்வேறு வேறு பெயர்களில் அருள் பாலிக்கின்றாள் என்றும் பலரும் கூறுகின்றனர்.

    தென் தமிழ் நாட்டுப்பகுதிகளில் இந்த வழிபாட்டு மரபை காணமுடியாது. முழுமையான அன்னையின் உருவமே அங்கெல்லாம் விளங்கும். அமர்ந்து உள்ள நிலையிலோ, அல்லது நிற்கும் நிலையிலோ அம்மன் விளங்குவாள்.

    எத்தனையோ கோடி பேர்களின் இதய தெய்வம் இவள்! இவள் கோவிலுக்கு வந்தாலே உள்ளத்தில் நம்பிக்கை பிறக்கும். எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். இன்னல்கள் எல்லாம் மறையும், தொல்லைகள் பலவும் விலகும், எதிர்ப்புகள் நீங்கும், பகைகள் தேயும், எல்லா நலனும் பெருகும்.

    ×